கோவில்பட்டி சிறையில் தந்தை, மகன் மர்ம மரணம்... வலுக்கும் கண்டனங்கள்.. கொந்தளிக்கும் தலைவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த நிகழ்வு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரை கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் வெளிட்டு வருவதோடு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
நெஞ்சுவலியால் மகன் மரணம்.. அடுத்த சில மணி நேரத்தில் தந்தையும் மரணம்.. தூத்துக்குடி பரபரப்பு
கடும் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் உயிரிழந்திருக்கின்றனர். காவல்துறையினர் தாக்கியதில் இந்த உயிரிழப்பு நடந்திருக்கும் என பலத்த சந்தேகம் எழுகிறது. இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடும் கண்டனம்
ஜெயராஜ் நாடார், பெனிக்ஸ் இம்மானுவேல் நாடார் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்ட போது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. எனவே, காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கொந்தளிப்பு
கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தந்தையையும், மகனையும் கடுமையாக தாக்கி கொலை செய்ததாக கூறி, மறைந்த ஜெயராஜ் நாடாரின் மனைவி செல்வராணி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அனுப்பியிருக்கிறார். எந்த தவறையும் செய்யாத நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காவல்துறை தான் முழு பொறுப்பாகும். காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
மேலும், இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
காவல் சித்ரவதை
காவல் சித்ரவதை மரணத்திற்குக் காரணமான சாத்தான்குளம் காவல்நிலைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையின் சித்ரவதையினால் உயிரிழந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இதில் தொடர்புடைய காவலர்களை உடனடியாக பதவி இடைநீக்கம் செய்ய வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கவலை அளிக்கிறது
காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வருபவர்கள் மீது மிக மோசமான சித்ரவதைகளை செய்யும் காவல்துறையினர் போக்கு பெரும் கவலையை அளிக்கின்றது. காவல்துறையினர் அனைவருக்கும் கட்டாய மனித உரிமை கல்வி அளித்து அவர்களை நெறி முறைப்படுத்தும் பணிக்கு முதலமைச்சர் முன்னுரிமை அளிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.