நாளை தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு தினம்... போலீஸ் கடும் எச்சரிக்கை
தூத்துக்குடி: அதிகார வர்க்கத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது இயல்பான ஒன்றாக மாறிவருகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுதான் தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே 22 மற்றும் 23ம் தேதிகளில் நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
யாரோ அனுமதி கொடுத்து யாரோ தொடங்கி வைத்து, யாரோ விரிவாக்கம் செய்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து யாரோ ஒருங்கிணைத்த போராட்டத்தில் திடீரென ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் களம் காண ஆரம்பித்தனர்.
இந்த போராட்டம் கடந்த ஆண்டு 100வது நாளை எட்டியதை நினைவு கூறும் விதமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மே 22ம் தேதி ஆயிரக்கணக்கான தூத்துக்குடி மக்கள் பேரணி சென்றனர். அப்போது அனுமதி மறுத்து தூத்துக்குடி போலீசார் அவர்களை விரட்டி அடிக்க முயன்றபோது நடந்த கலவரத்தில் 13 அப்பாவிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்டெர்லைட்டுக்கு சீல்
இந்த கோர நிகழ்வில் 13 உயிர்கள் பலியான பின்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல்வைத்தது. இந்த ஆலையை மீண்டும் திறக்கக்கோரி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எந்த அசம்பாவிதமும் நடக்காத அளவுக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
கடும் எச்சரிக்கை
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்களாலோ, அமைப்புகளாலோ பிரச்சனை நேர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
18சோதனை சாவடிகள்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் 18 சோதனைச்சாவடிகளும், மாவட்ட எல்லையில் 8 சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறினார்.