சாத்தான்குளம் அருகே மீண்டும் ஷாக்.. வியாபாரி கடத்தி கொலை! இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் மீது வழக்கு
தூத்துக்குடி: தட்டார்மடம் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், 17-ஆம் தேதி மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்வம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், நெல்லை மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், ''எங்களுக்குச் சொந்தமான தோட்டம் படுக்கப்பத்து - காந்திகாந்தி நகர் மெயின் ரோட்டிற்கு பக்கம் இருக்கிறது. எங்கள் தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தினை எனது கொழுந்தன் சிலுவை தாசன் மற்றும் துரைராஜ் என்பவரிடமிருந்து உசரத்து குடியிருப்பை சேர்ந்த திருமணவேல் என்பவர் தனது மனைவி லிங்ககனி பெயரில் கிரையம் பெற்றுள்ளார்.
சேலத்தில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்.. 4ஆவது மாடியிலிருந்து குதித்து இருகுழந்தைகளின் தாய் தற்கொலை
நிலத்தகராறு
அவருடைய நிலத்துடன் எங்களுக்குச் சொந்தமான சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் சேர்த்து கடந்த 2019-ம் ஆண்டு அடைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வருகிறது. சொத்து பிரச்சினையை பகையாக கொண்டு எனது இடத்தினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருமணவேல் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் துணையுடன் எனது மகன்கள் செல்வன், பங்காரு ராஜன் என்ற ராஜன், பீட்டர் ராஜா, ஆகியோர் மீது பல பொய் புகார் கொடுத்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்தார்கள்.
தட்டார்மடம்
இதற்கிடையில் திருமணவேல் எனது தோட்டத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து சேதப்படுத்தியது சம்பந்தமாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு என் மகன்கள் சென்றனர். ஆனால் அந்த புகாரை வாங்க மறுத்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொய் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து எனது மகன் பீட்டர் ராஜாவின் லாரியை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்து எனது மகனையும் அடித்து காயப்படுத்தினார்.
காயம்
மேலும் எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜனை 19.1.2020 அன்று திருமணவேல் மற்றும் அவரது வகையறாக்கள் அடித்து காயப்படுத்தியதால் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகனை தட்டார்மடம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தலைகீழாக கட்டி போட்டு கால் மற்றும் கைகளில் அடித்து சித்திரவதை செய்தும் வழக்கு பதிவு செய்து எனது மகனை சிறையில் அடைத்தார்.
தட்டார்மடம் காவல் ஆய்வாளர்
ஜாமீனில் வந்த எனது மகன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமணவேல் மீது சென்னை மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனால் திருமணவேலின் தூண்டுதலில் பேரில் எனது மகன்களை குண்டாசில் அடைக்க வேண்டும் என தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் துன்புறுத்தினார்.
நீதியரசர்
வழக்கில் நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்களை துன்புறுத்தி அதை அபிடவிட்டாக பதிவு செய்து எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜன் 16.9.20 மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வழக்கு 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் இன்று காலையில் அபிடவிட் குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
ஆத்திரம்
இதனால் கோபம் கொண்டு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் 17.9.2020 மதியம் ஒன்றரை மணிக்கு குறுந்தட்டு என்பவரின் மளிகை கடை அருகே எனது மகன் செல்வன் அவரது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருமணம் அவரது சொந்த காரில் திருவேடகம் அடையாளம் தெரியாத நபர்களும் செல்வனை தாக்கி அவருடைய காரில் கடத்திச் சென்று விட்டார்கள். தகவலறிந்த நான் எனது மகனை தேடிக் கொண்டிருந்த நிலையில் மாலை 3 மணியளவில் தட்டார்மடம் காவலர்கள் எனது மகன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார்கள்.
பலத்த காயம்
எனது மகனைப் பார்க்க எனது மருமகள் ஜீவிதா மற்றும் மிசேல் ஜஸ்டின் உடன் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது எனது மகன் இறந்த நிலையில் இருந்தார். அது பற்றி மருத்துவரிடம் விசாரித்தபோது 17-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு செல்வனை மர்ம நபர்கள் மருத்துவமனை வாசலில் போட்டு விட்டு சென்றதாகவும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததாகவும் கூறினார்கள். உடனே எனது மகனை பார்த்த போது தலையில் பலத்த காயமும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
வழக்கு பதிவு
தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் திருமணவேல் அடியாட்களுடன் அவரது காரில் எனது மகனை கடத்திச் சென்று அடித்து கொன்று திசையன்விளை அரசு மருத்துமனையில் சடலமாக போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். எனவே தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மற்றும் அவரது அடியாட்கள் மீது வழக்கு பதிவு செய்து எனக்கும் எனது மற்ற மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி பணிந்து வேண்டுகிறேன்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
விசாரணை
இதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் போலீஸாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.