ராசாத்தி தலையை துண்டித்த மருது.. பதற வைக்கும் படுகொலை
கோயிலுக்குள் நுழைந்து திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்டார்.
Recommended Video
தூத்துக்குடி: அம்மன் கோயிலில் திருநங்கை ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ராசாத்தி. இவர் லூர்தம்மாள்புரம் பகுதியிலுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த மருது என்பவர் இதற்கு முன்பு இதே கோயிலில் பூசாரியாக இருந்தார். ராசாத்தி பூசாரியாக வந்ததில் இருந்து, அவருக்கும், மருதுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நன்கொடை வசூல்
இதைதவிர, திருவிழா நடத்துவது, உள்ளிட்ட பல விஷயங்களில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டு வந்திருக்கிறது. விரைவில் கோயில் விழா நடக்க உள்ளது. இதற்கான நன்கொடை வசூலும் நடந்து வருகிறது. இந்த வேலையில்தான் ராசாத்தி ஈடுபட்டு வந்திருக்கிறார்.
பூஜை வேலைகள்
இதுதான் மருதுவுக்கு உச்சக்கட்ட ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ராசாத்தியை கொலை செய்யவும் துணிந்திருக்கிறார். நேற்று மாலை 5.30 மணியளவில் வழக்கம்போல் ராஜாத்தி கோயிலுக்கு வந்திருக்கிறார். அங்கு பூஜை வேலைகளை செய்ய துவங்கி உள்ளார்.
ராசாத்தி தலை
அப்போது கோயிலுக்குள் மருது கையில் அரிவாளுடன் திடீரென புகுந்தார். அங்கிருந்த ராசாத்தியை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் ராசாத்தி கீழே சரிந்தார். ஆனால் அப்போதும் ஆத்திரம் அடங்காத மருது, ராசாத்தியின் தலையை தனியாக துண்டித்து எடுத்து, அதனை கோயிலுக்கு அருகில் வீசிவிட்டு போனார்.
திரண்ட திருநங்கைகள்
இதுகுறித்து தகவல் அறிந்த வடபாக்கம் போலீசார் விரைந்து சென்று ராசாத்தி உடல், மற்றும் தலையை மீட்டனர். மேலும் தப்பியோடிய மருதுவையும் தேடி வருகிறார்கள். இதனிடையே திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்த அந்த பகுதியில் ஏராளமான திருநங்கைகள் சம்பவ இடத்தில் திரண்டுவிட்டனர்.
வாக்குவாதம்
கொலையாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அம்மன் கோயிலுக்குள் நுழைந்து திருநங்கையை கொன்று தலையை தனியாக வெட்டி எடுத்து வீசிய சம்பவம் தூத்துக்குடி மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.