ரகுகணேஷ் அழைத்து சென்ற மகேந்திரன்.. மூளையில் பாதிப்பால் இறப்பு.. மருத்துவ ஆவணத்தில் தகவல்
தூத்துக்குடி: ஜெயராஜ், பென்னிக்ஸை சப் இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தனது கஸ்டடிக்கு கொண்டு செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மகேந்திரன் என்ற இளைஞரை கொண்டு சென்று வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஓரிரு நாட்களில் அவர் இறந்த நிலையில் அவரது மருத்துவ ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அதில் மகேந்திரன் போலீஸ் கஸ்டடியில் இருந்து வீட்டுக்கு வரும் போதே மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர் மகேந்திரன் (28) என்பவரை எஸ்ஐ ரகு கணேஷ் அழைத்து சென்றார்.
கடந்த மே 23-ஆம் தேதி ரகுகணேஷும் அவரது குழுவினரும் மகேந்திரனின் தாய் வழி பாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளனர். அங்கு கொலை வழக்கில் 9பேரில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் துரை (35) என்பவரை கேட்டுள்ளனர். அவர் வீட்டில் இல்லாததால் அவரது சகோதரர் மகேந்திரனை கஸ்டடிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சாத்தான்குளத்தில் விசாரணையை ஆரம்பித்தது சிபிசிஐடி.. ஜெயராஜ் குடும்பத்திற்கு ஏடிஜிபி நேரில் ஆறுதல்
பெருமாள்
இதுகுறித்து மகேந்திரனின் தாய்மாமா பெருமாள் கூறுகையில் ரகுகணேஷ் உள்ளிட்ட போலீஸார் வந்த காரில் இரு பக்கமும் நம்பர் பிளேட்டே இல்லை. ரகுகணேஷ் மஃப்டியில் வந்தார். மகேந்திரனை பிடித்து சென்ற அவர்கள், துரை சரணடைந்தால் மட்டுமே மகேந்திரனை விடுவிக்க முடியும் என மிரட்டிவிட்டு சென்றனர்.
மாற்றுத்திறனாளி
இதையடுத்து அவர்கள் மகேந்திரனை அடுத்த நாள் இரவு வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். வீடு வந்த மகேந்திரன் தனது உடலை ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை என்றார். கஸ்டடியில் இருந்து வந்த மகேந்திரன் அவர் அவராகவே இல்லை என்றார். இதுகுறித்து மகேந்திரனின் மாற்றுத்திறனாளியான தாய் கூறுகையில் தன்னால் ஒரு பக்கம் கையையும் காலையும் அசைக்க முடியாமல் என் மகன் அவதிப்பட்டார்.
போலீஸ்
என்னாச்சு என கேட்டதற்கு என்னை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டார். எனது தாய்வீட்டிலிருந்து என் மகனை அழைத்து சென்ற போலீஸ் "உன் பேரனை மறந்துவிடு" என மிரட்டிவிட்டே சென்றனர். எங்கள் குடும்பத்திற்கே வருமானத்தை ஈட்டி தந்தது மகேந்திரன்தான். குடும்பம் கஷ்டத்தில் இருந்த போது எப்படி ஓரிரு வாரங்களில் சரியாகிவிடுவார் என நினைத்தேன்.
உடல்நிலை
ஒரு நாள் மகேந்திரனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. உடனே அவரை தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவரது தலையில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். தலையில் நிறைய உள்காயங்கள் உள்ளதாக தெரிவித்த டாக்டர்கள் மகேந்திரனை அட்மிட் செய்ய சொன்னார்கள். அதன்படி வியாழக்கிழமை அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். சனிக்கிழமை இறந்துவிட்டார்.
கட்டிய ரத்தம்
மகேந்திரன் ஒரு அப்பாவி. அவர் மீது எந்த குற்றவியல் நடவடிக்கைகளும் இதுவரை இல்லை என்றார். கூலித்தொழிலாளியான மகேந்திரன் லாக்டவுனால் வேலையின்றி அவதிப்பட்டு வந்தார். அவரது மருத்துவ ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவரது எம்ஆர்ஐ ஸ்கேனில் இடது பக்க மூளையில் ரத்தம் கட்டியிருந்தது தெரியவந்தது.
குடும்பத்தார் குற்றச்சாட்டு
மகேந்திரனின் மூளைக்கு செல்லும் ரத்தம் நிறுத்தப்பட்டிருக்கலாம். அல்லது ரத்தக் குழாய்கள் வெடித்திருக்கலாம். இதனால்தான் அவரது ஒரு பக்கம் செயலிழந்து விழுங்கவோ சாப்பிடவோ முடியாத நிலை ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த நிலையில் மகேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை என குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள்.
அனுமதிக்கவில்லை
பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்களிடம் கூறிய போது கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகம் இருப்பதால் உடலை கொண்டு செல்லும் படி கூறிவிட்டனர். அதனால் அவரது உடலை கொண்டு வந்த உறவினர்கள் உடலை அடக்கம் செய்துவிட்டனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட முயற்சித்தபோது அவர்கள் இருவரும் இந்த குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.
எஃப்ஐஆர் இல்லை
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இதுகுறித்து மகேந்திரன் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ராமானுஜம் கூறுகையில் மகேந்திரனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இந்த வழக்கின் நோக்கமாகும். முதல் தகவல் அறிக்கை போடாமலேயே மகேந்திரன் போலீஸ் கஸ்டடியில் இருந்துள்ளார், மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார். அவரை உள்ளூர் நீதிபதியிடம் கூட ஆஜர்படுத்தவில்லை.
Recommended Video
கொலை வழக்கு
சட்டத்தை கையில் எடுப்பதற்கு இவர்கள் யார். வயதான பெண் மட்டும் தனியாக இருக்கும் போது அவரது வீட்டில் நுழைய யார் அதிகாரம் கொடுத்தது? வயதான அந்த தாய்க்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.