தூத்துக்குடியில் நெகிழ்ச்சி.. எஜமானியை காப்பாற்ற நல்ல பாம்பை கடித்து கொன்று.. உயிர்விட்ட நாய்
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தனது எஜமானியை காப்பாற்ற, நல்ல பாம்புடன் சண்டை போட்டு அதனை கொன்று நாய் உயிர்விட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியை பொன்.செல்வி. இவரது கணவர் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
பேராசிரியை பொன்.செல்வி இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். ஆண் நாய்க்கு அப்பு' என்றும், பெண் நாய்க்கு நிம்மி' எனவும் பெயர் வைத்துள்ளார். இரண்டு நாய்களையும் குழந்தையைப் போல் பாசமாக வளர்த்து வந்தார் பொன்.செல்வி.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு இரவில், வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு வந்துள்து. பாம்பைக் கண்டதும், அங்கு படுத்திருந்த இரண்டு நாய்களும் சத்தமாக குரைத்துள்ளன. அப்போது, ஆண் நாய் அப்பு, பாம்பைக் கடித்துள்ளது. பாம்பும் பதிலுக்கு நாயைக் கொத்தியுள்ளது.
பாம்பை வாயில் கவ்வியபடி படிக்கட்டு வழியாக மொட்டை மாடிக்கு எடுத்துச்சென்று அப்பு போட்டுள்ளது. பின்னர் பாம்பும், நாயும் சிறிது நேரத்தில் பக்கத்திலேயே அடுத்தது உயிரிழந்தன. மறுநாள் காலையில் பொன்செல்வி கதவைத் திறந்து பார்த்தபோது, பெண் நாயான நிம்மி' மடடும் இருந்துள்ளது. ஆண் நாய் அப்புவைக் காணாததால் அதிர்ச்சி அடைந்த பொன் சொல்வி. சுற்றி முற்றி தேடி உள்ளார். மாடிக்கும் சென்று பார்த்துள்ளார். பாம்பும், ஆண்நாய் அப்புவும் அருகருகே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனது குடும்பத்தைப் பாம்பிடமிருந்து காப்பாற்ற பாம்பைக் கொன்று தானும் இறந்துவிட்டதை எண்ணி பொன் செல்வி நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.