கொரோனா: மனு அளிக்க நேரில் வர வேண்டாம்.. சிறப்பு தனி வார்டு ரெடி.. தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி: கொரோனா தொற்று நோய் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க மக்கள் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை என்று அந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி ஓட்டுநர்கள், வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள், சங்க நிர்வாகத்தினர் ஆகியோருடனான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் நடவடிக்கைகள் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்துவரும் 15 நாட்களுக்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தொற்று ஏற்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். தும்மல் இருமலின்போது நாசித் துவாரத்தை மூடிக்கொள்ள வேண்டும்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கூட மக்கள் நேரில் வந்து மனு அளிக்கவேண்டிய அவசியம் இல்லை. அவசரம் என்றால் மட்டும் நேரில் வந்து மனு தரலாம்.
வெளிநாட்டிலிருந்து, தூத்துக்குடி திரும்பிய 48 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பியவர்கள் 14 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும். ஆனால் அவர்களை மருத்துவ குழுவினர் தற்போது 28 நாட்கள் வரை தொடர் கண்காணிப்பில் வைத்து வருகின்றனர். அதன்பிறகே அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் நிறுத்தப்படுகிறது.
தற்போது வரை தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை. பொதுமக்கள் யாரும் நோய் தொற்று குறித்து பீதி அடைய வேண்டாம். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு மருத்துவ தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் சிகிச்சை பெறக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் மருத்துவர்கள் செவிலியர்கள் எந்நேரமும் பணியாற்றிய விடும் வகையில் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் தொற்று குறித்த ரத்த மாதிரிகள் முடிவை உடனடியாக பெறுவதற்கு திருநெல்வேலியில் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.