தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை- ரஜினிக்கு இன்று மட்டும் விலக்கு- மீண்டும் ஆஜராக சம்மன்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையம் இதுவரை 18 கட்ட விசாரணை நடத்தியுள்ளது. இன்றைய விசாரணைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியது.
ஒருநபர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டதால்தான் வன்முறை வெடித்தது- அதனால்தான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என ரஜினிகாந்த் பேட்டி கொடுத்திருந்தார். இதனடிப்படையில் ரஜினிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தோ, தாம் தூத்துக்குடிக்கு வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள்; அதனால் சட்டம் ஒழுங்கு கெட்டு போகும்; எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று 19-வது கட்ட விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நடத்தியது.
ரஜினி வக்கீல் ஆஜர்
இன்றைய விசாரணையின் போது ரஜினிகாந்தின் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார். அவர் ரஜினியின் கோரிக்கை குறித்து ஆணையத்திடம் விளக்கினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன், ரஜினியிடன் கேட்க இருந்த கேள்விகளை எழுத்துப்பூர்வமாக வழக்கறிஞர் இளம்பாரதியிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது:
இன்று மட்டும் ரஜினிக்கு விலக்கு
நடிகர் ரஜினிகாந்த் இன்றைக்கு விசாரணைக்கு ஆஜராக முடியாது என கூறி வழக்கறிஞர்கள் மூலம் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2 காரணங்கள் கூறப்பட்டிருந்தன. தாம் வந்தால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும்; தொழில்சார்ந்த விஷயத்தில் ஏற்கனவே கமிட் ஆகியிருப்பதால் இன்று நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். ரஜினிகாந்த் வருவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதை விசாரணை ஆணையம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கனவே பல அரசியல் தலைவர்கள்; சினிமா பிரபலங்கள் இங்கு வந்து சாட்சியம் அளித்திருக்கின்றனர். அதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பு இல்லை. போலீசார் அதற்கு உரிய தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அவர் ஏற்கனவே சினிமா ஷூட்டிங்கில் கமிட் ஆகியிருப்பதால் இன்று மட்டும் அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு மீண்டும் சம்மன்
ரஜினிகாந்த் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என்று சொல்லியிருக்கிறோம். இன்றைய விசாரணை ஆணையத்தில் என்ன விசயமாக கேள்விகள் கேட்பீர்கள் என தெரிவித்தால் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்வோம் என ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது என்பது நடைமுறையில் உள்ளதுதான். இதுவரை 400, 500 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ரஜினி விசாரணைக்கு வர வேண்டும்
அப்படி ரஜினிகாந்த் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் போது அதில் உள்ள விவரங்களின் அடிப்படையில் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகும்போது கேள்விகள் கேட்கப்படும். ரஜினிகாந்த் விசாரணை ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து முழுமையாக விலக்கு அளித்திருப்பதாக வெளியான செய்திகள் சரியானவை அல்ல. ரஜினிகாந்த் அண்மையில் அளித்த பேட்டியில் கூட தம்மிடம் இருக்கும் தகவல்களை விசாரணை ஆணையத்திடம் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் கூறிய சில கருத்துகள் இந்த விசாரணைக்கு மிக அவசியமானவை என்பதால் அவர் ஆஜராவது அவசியம். ரஜினிகாந்த் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்பதற்கான சம்மன் அனுப்புவோம். நிச்சயம் சம்மன் அனுப்புவோம். ஏற்கனவே பல சாட்சிகள் நாங்கள் குறிப்பிட்ட தேதிகளில் ஆஜராகாமல் விலக்கு கோரியிருந்தனர். ரஜினிகாந்துக்கு எப்போது வாய்ப்பிருக்கிறதோ அதை தெரிந்து கொண்டும் கூட விசாரணைக்கு அழைப்போம். இவ்வாறு அருள்வடிவேல் சேகர் கூறினார்.