தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதலாமாண்டு நினைவு தினம்.. சுப. உதயகுமார் கைது, 2500 போலீஸ் குவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு, இன்று முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தென்மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டம், நூறாவது நாளை எட்டியதையொட்டி கடந்த வருடம் இதே நாளில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தின் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்திய மக்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின், முதலாவது ஆண்டு நினைவு தினம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, தூத்துக்குடி மாநகரில் சுமார் 2,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டிஐஜி கபில் குமார், மாவட்ட எஸ்பி முரளிரம்பா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவமனை, சிப்காட் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள தோமையார் கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று காலை திருப்பலி முடிந்தவுடன், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, மெழுகுவர்த்தி ஏந்தியும், தங்களது உடைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்தும் அஞ்சலி செலுத்தினர்.
பாத்திமா நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருப்பலிக்கு பின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி ஆரம்பித்தது தூத்துக்குடி அருகே உள்ள குமாரரெட்டியார்புரம் என்ற பகுதியில் தான். அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு தயாராக உள்ளனர். அவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தூத்துக்குடிக்கு நினைவேந்தல் செலுத்துவதற்காக நாகர்கோவிலில் இருந்து கிளம்பிய பச்சைத் தமிழகம் கட்சி தலைவரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமாரை, நாகர்கோவில் கோட்டாறு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
சுப.உதயகுமார் வீட்டுக்கே சென்று போலீசார் அவரை கைது செய்து கோட்டாறு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
அதேபோல பச்சைத் தமிழகம் கட்சியின், குமரி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பொதுமக்கள் பேரணியாக செல்லவோ, அல்லது பொது இடங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி மாநகரம் பதற்றத்தோடு காணப்படுகிறது.