கடவுளே நன்றி.. அனைத்து மத கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனை.. தூத்துக்குடியில் உற்சாக வெள்ளம்
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. இதனால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடியின் ராஜாஜி பூங்கா, பழைய பேருந்து நிலையம், புதுத்தெரு, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பு மக்களும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக இந்த தீர்ப்பை கொண்டாடி கோஷங்கள் எழுப்பி மகிழ்ந்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அனைத்து மத கோவில்களிலும் சிறப்பு கூட்டு வழிபாடுகள் நடந்தன. தூத்துக்குடி சிவன் கோவில், தூத்துக்குடி ஜாமியா பெரிய பள்ளிவாசல், மாதா கோவில் உள்ளிட்ட அனைத்து மத கோயில்களிலும் நல்லிணக்க பிரார்த்தனைகள் ஏறெடுத்து அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும், இந்த தீர்ப்பை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், ஆலை நிர்வாகம் பல்வேறு சட்டவிதிமுறை மீறல்களை செய்துள்ளதால் ஆலை நிர்வாகம் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.