"விவசாயத்த மட்டும் அழியாம பாத்துக்கோங்க"... ஸ்டாலினை அதிரவைத்த தூத்துக்குடி பெண்
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் விவசாயத்தை மட்டும் அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு பெண் கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின், தனது சகோதரி கனிமொழியுடன் இணைந்து வாக்காளர்களுடன் ஒட்டப்பிடராம் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் ஸ்டாலினை நோக்கி வந்து பேசுகையில், "யாரும் வந்து கட்டாயப்படுத்தி இங்கு வரவில்லை. நமக்கு இவங்க வந்தாதான் நல்லா இருக்கும் என நினைத்து உங்கள தேடி நாங்களா வந்திருக்கோம். இந்த முறை திமுக ஆட்சி தான் அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்றார்.
அப்போது அந்த பெண்ணிடம் குடும்பம் மற்றும் விவரங்கள் குறித்து விசாரித்தார்.அதற்கு அந்த பெண் தான் டெய்லிங் செய்வதாகவும் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பெண் ஸ்டாலினிடம் "விவசாயத்தை அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் இங்கு நடந்து வந்த பாதையில் ஒரு பக்கம் வயல்கள் மற்றாரு பக்கம் குளம் இருந்தது. அந்த குளத்தை ஆழப்படுத்தினால் எங்களுக்கு போதுமான அளவு விவசாயம் வரும்.
எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம். முள்புதறாக காணப்படும் குளத்தை சுத்தம் செய்து ஆழப்படுத்தினாலே போதும். தூத்துக்குடி மாதிரி வேறு ஊரை நீங்க பார்க்க முடியாது. இங்கு நெல்லும் எடுப்பாங்க, உப்பும் எடுப்பாங்க, எங்க ஊர்ல இரண்டுமே விளையக்கூடியது. அப்படி இருக்கும் போது விவசாயத்தை நாங்க உயிராக நினைக்கிறோம். எங்களுக்கு, இதை நீங்க செய்யலைன்னா கேள்வி கேட்கவே செய்வேன்" இவ்வாறு கூறினார்.