ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.. உறுதியளித்த தூத்துக்குடி ஆட்சியர்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்பதில் தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பின்னர், அந்த ஆலை மூடப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்து, உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும் கண்டிப்பாக இந்த ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாகவது :
ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது. இது இறுதி தீர்ப்பு இல்லை.
இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன. சட்டரீதியாக தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். பசுமை தீர்ப்பாயம் உத்தரவில் பல நிபந்தனைகள் உள்ளன.
அதனை பற்றி தற்போது ஆலோசிக்க வேண்டியது இல்லை. மக்கள் இந்த ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என்று அச்சப்பட தேவை இல்லை. அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கக்கூடாது என்றுதான் அரசாணை வெளியிட்டு மூடப்பட்டது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளோம். மக்கள் அமைதி காக்க வேண்டும்.
எந்தவித போராட்டத்திலும் மக்கள் ஈடுபட வேண்டிய தேவை இல்லை. நாளைக்கே ஆலையை திறக்க எந்த உத்தரவும் இல்லை. ஆலையில் இருந்து ரசாயன பொருட்கள் எடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்