அறிவிக்காத அதிகாரிகள்.. நடுக் கடலில் சுழன்று வீசிய காற்று.. அவசரமாக திரும்பிய தூத்துக்குடி மீனவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வானிலை எச்சரிக்கை சரிவர தெரிவிக்கப்படாததால், 140 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள், காற்று காரணமாக கரை திரும்பினர்.
Recommended Video
மீன்வளத்துறை அதிகாரிகள் இதுபற்றி முறையாக தகவல் தெரிவிக்காததே காரணம் எனக்கூறி மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர மாவட்டங்களில் கன மழை மற்றும் கடல் சீற்றம் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.
இது தொடர்பாக மீன்வளத் துறை வெளியிட்ட அறிவிப்பில், மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த மீனவர்கள் எச்சரிக்கை பலகை அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதைக் கண்டு 140 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆனால் ஆழ்கடலில் வீசிய கடும் காற்று காரணமாக மீனவர்கள் கரை திரும்பினர்.
வானிலை நிலவரம் தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வெலிங்டன், தர்ம பிச்சை ஆகிய மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த சனிக்கிழமை மீன்வளத்துறை சார்பில் கடல் சீற்றம் தொடர்பான எச்சரிக்கை பலகை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வாசலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று அந்த எச்சரிக்கை பலகை அகற்றப்பட்டதை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்லலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் 140 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனைவரும் திரும்பி வந்து விட்டோம்.
வானிலை எச்சரிக்கை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காதது இன்றைக்கு எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காரணம். ஒரு படகுக்கு 35 ஆயிரம் வரை இன்று செலவு செய்துள்ளோம். இந்த இழப்பினை மீன்வளத்துறை அதிகாரிகள் எங்களுக்கு ஈடுகட்டுவார்களா? இது தவிர நாள் ஒன்றுக்கு விசைப்படகு தொழிலாளிக்கு 1500 ரூபாய் படியாக வழங்கப்படுவதும் இன்றையதினம் தடைபட்டுள்ளது. எனவே இன்றைய சூழ்நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, புயல் மழை காலங்களில், வானிலை எச்சரிக்கை குறித்த நோட்டீஸ் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நாங்கள் ஏற்கனவே மீன்வளத் துறை அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் தற்பொழுது வரை அந்த நடைமுறையை மீன்வளத்துறை அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை.
மீனவர்கள் மீது இந்த அரசும், அதிகாரிகளும் அக்கறை கொண்டதாக தெரியவில்லை. எங்களில் யாருக்கேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த உயிர் இழப்பை ஈடுகட்ட இந்த அரசும் அதிகாரிகளும் தயாரா? யார் இதற்கு பதில் சொல்லுவார்கள்? மாவட்ட ஆட்சியர் பதில் கூறுவாரா என்று ஆவேசமாக கூறினர்.