தூத்துக்குடியில் சோகம்.. பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற இரட்டை சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பாட்டிக்கு சாப்பாடு கொடுக்க சென்ற இரட்டையர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம், புதியபுத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு.
செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பூரணம் தனது மகன்களுடன் அப்பகுதியில் பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தனர். சிறுவர்களின் பாட்டி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சாப்பாடு
இந்நிலையில் பாட்டிக்கு தினசரி சாப்பாடு கொடுப்பதற்காக சிறுவர்கள் 2 பேரும் வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து செல்வது வழக்கம். இதேபோல் நேற்று மதியமும் அவர்கள் 2 பேரும் பாட்டிக்கு சாப்பாடு கொடுப்பதற்காக சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் அருகில் இருந்த ஊருணிக்கு சென்று குளித்ததாக தெரிகிறது.
ஊருணி
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்கையில் நீர் சுழலில் சிக்கி இரட்டையர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் ஆட்கள் யாரும் இல்லாததால் சிறுவர்களின் அபாயக்குரல் கூட யாருக்கும் கேட்கவில்லை. இதனால் சிறுவர்கள் இரண்டு பேரும் ஊருணியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஊருணியில் நீரில் மூழ்கிய சிறுவர்கள்
சாப்பாடு கொடுக்கச்சென்ற சிறுவர்கள் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பதட்டம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று காலை சந்தேகத்தின்பேரில் ஊருணிக்கு சென்று உறவினர்கள் தேடி பார்க்கையில் ஊருணியில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இறந்து கிடப்பது தெரியவந்தது.
புதியம்புத்தூர் போலீஸ்
இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்த தகவல் புதியம்புத்தூர் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையின் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த சில ஆண்டுகளிலேயே இரட்டையர்களான சிறுவர்கள் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.