மரணத்தில் முடிந்த அதிவேக பயணம் - உடல் கருகி பலியான இளைஞர்கள் - தூத்துக்குடியில் சோகம்
தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது வேன் மோதியதில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார் மற்றொருவர் தூக்கி வீசப்பட்டு மரணமடைந்தார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பைக்கில் வந்தவர்கள் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்ட வேகத்தில் மற்றொருவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். படு வேகத்தில் வந்த வேன் மீது வேகமாக வந்த பைக் மோதி தூக்கி வீசப்பட்டதாலேயே இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து இருவரின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது.
அதிவேகம் ஆபத்து என்று எத்தனையோ விழிப்புணர்வு செய்திகளை எழுதி வைத்தாலும் அதை யாரும் கேட்பதே இல்லை. விபத்தில் உயிரிழந்த இருவருமே 18 வயதே ஆன இளைஞர்கள். கல்லூரியில் பி.ஏ படித்து வந்த அந்த இளைஞர்களை வேன் ரூபத்தில் வந்த எமன் காவு கொண்டு விட்டான்.
நண்பனிடம் கடன் வாங்கிய இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும் வீடு திரும்பாமலேயே எரிந்து சாம்பலாகி போயினர். அந்த இரு சக்கர வாகனம் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் புதிதாக வாங்கப்பட்டதாம். அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டனர்.
கடைசி பயணம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் மகன் சாமிநாதன், வேம்பு மகன் அசோக் கணேஷ் நண்பர்களான இருவரும் ஒரு கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். சாமிநாதன் நேற்று காலை தனது மற்றொரு நண்பரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை கடன் வாங்கிக் கொண்டு அசோக் கணேசுடன் திருநெல்வேலிக்கு சென்றார். அதுதான் தனது கடைசி பயணம் என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.
வேன் மீது மோதி விபத்து
நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பாலத்தை கடந்தபோது, வேன் மீது சாமிநாதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
உடல் கருகி பலியான இருவர்
இந்த கோர விபத்தில் சாமிநாதன் மீது தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மற்றொரு இடத்தில் தூக்கி வீசப்பட்ட அசோக் கணேசும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். உயிரிழந்த 2 மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிக வேகமே விபத்துக்கு காரணம்
சாமிநாதன் இரவல் வாங்கி ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கியதாக உறவினர்கள் கூறினர். படுவேகத்தில் பைக் சென்றதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியிலும், அவரது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாடு மோதி மரணம்
இதனிடையே மானூர் அருகே ரெட்டியார்பட்டியை சார்ந்த மணித்துரை நாடா மகன் மயில் ராஜ், 30 என்பவர் மானூரிலிருந்து அழகியபாண்டிபுரம் வரும் போது மாடு குருக்கே வந்ததாக கூறப்படுகிறது அதில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மானூர் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மயில்ராஜ், விடுமுறைக்காக தற்போது சொந்த ஊர் வந்திருந்த போது விபத்தில் உயிரிழந்து விட்டார்.