வைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர்: வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள முருகன் திருத்தலங்களில் சுவாமி தரிசனத்திற்காக, பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அவதார நாளாக, வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும், வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இன்று விசாக திருநாளின், நிறைவு நாள் ஆகும். இதையொட்டி திருச்செந்தூரில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 1 மணிக்கே, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
எச்.ராஜா இப்படி பேசலாமா.. ஊரே ஒன்று திரண்டது.. போலீசில் பரபரப்பு புகார்
பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும், முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர். வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
பிற முருகன் திருத்தலங்களை காட்டிலும், திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழாவின் நிறைவு நாளான இன்று முக்கிய நிகழ்வாக, முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கிறார் சுப்பிரமணியர்.
இதையடுத்து மகா தீபாராதனை நடை பெற்ற பிறகு, நிறைவு நிகழ்வாக, ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருத்தணி மற்றும் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.