இணைந்து செயல்படுவோம் வாங்க.. தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம்... கனிமொழி எம்.பி நச்
தூத்துக்குடி: தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வுகான வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில், திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, கத்தாளம்பட்டியில் திமுக சார்பில் குடிநீர் விநியோகம் செய்வதை கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். குடிநீர் அனுப்ப கேரளா முன்வந்தாலும், அதனை அரசு மறுத்துள்ளதாகவும், காலி பிளாஸ்டிக் குடங்களே தமிழகத்தின் அடையாளமாக மாறி விட்டதாகவும் கனிமொழி விமர்சித்தார்.
முன்னதாக, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு சிந்திக்கவே இல்லை. எல்லா தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. தண்ணீர் தொட்டிக்கு முன் எத்தனை குடங்கள் வைக்க முடியும் என்ற கணக்கே இல்லை என்றும் கூறினார்.
மேலும், தண்ணீருக்காக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆற்றில் உத்து எடுத்து மக்கள் மணிக்கணக்கில் காத்து இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழலில் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்காக கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்தார்.
ஆனால், இந்த அரசு, திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை செயல்படுத்தாமல் பராமரிக்காமல் விட்டதாலும் நீர்நிலைகள் சரியாக தூர் வாராமல் விட்டதால் தண்ணீர் பிரச்சனை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.