எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம்... போராட்டக்குழுவினர் உறுதி
Recommended Video
தூத்துக்குடி: தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த விதிமுறைகள் படி ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து போராட்டக் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்றும் அதே நேரம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ள கருத்துகளை தற்போது பார்க்கலாம்.
முத்தரசன் கோரிக்கை
தமிழக அரசே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசு எதையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டது. கொள்கை முடிவு எடுக்க அனைவரும் கோரி வந்ததை தமிழக அரசு ஏற்கவில்லை. மாநில அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்க மாட்டோம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்தது தான். ஆனால், எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை. மக்களின் வாழ்வுரிமை கருத்தாக இதை முன்வைக்கிறேன்.
அடுத்த கட்ட நடவடிக்கை
வாழ்வதா, தீர்ப்பை ஏற்பதா என்ற சூழலில் தான் இந்த தீர்ப்பை எதிர்நோக்குகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூடி பேசி விவாதிக்கவுள்ளோம் என போராட்டக் குழுவைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
பயன்படாத அரசாணை
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஆச்சரியம் இல்லை, இதுதான் வரும் என்று தெரியும் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த முகிலன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அரசாணை எதற்கும் பயன்படாத ஒன்று என்று அன்றே சொன்னோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.