தர்பார் படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமா? கடம்பூர் ராஜு பதில் இதுதான்
தூத்துக்குடி: தர்பார் படத்திற்கு இதுவரை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்கவில்லை என்றும், முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி தலைமை வகித்தார். இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், தர்பார் படத்தில் உள்நாட்டு இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல், வெளிநாட்டுக் களைஞர்களுக்கு வாய்ப்பளித்தாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, திரைப்படத்தில் எந்த கலைஞரை பயன்படுத்த வேண்டுமென்பது தயாரிப்பாளர்களின் முடிவு. இதை திரைப்படம் வெளிவரும் போது சொல்வதைவிட, தயாரிக்கும்போது சொல்லியிருக்க வேண்டும். இதில் அரசு தலையிட முடியாது.
ஒரு படத்தில் யார் நடிகர், யார் இயக்குனர் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தயாரிப்பாளர். இதில் அரசு தலையிடுவது அவர்களின் உரிமையை பறிப்பது போன்றது. தமிழ் சினிமா திரை கடல் போன்றது. ஒவ்வொன்றுக்கும் சங்கம் இருக்கிறது. திரைப்படம் தயாரிக்கப்படும்போது இந்த கருத்தைச் சொல்லி இருக்க வேண்டும். தற்போது இதை சொல்வது அந்த படத்திற்கு விளம்பரத்தை தேடுவதற்காக சொல்லப்படும் கருத்து என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தர்பார் படத்திற்கு இதுவரை சிறப்பு காட்சிக்கு யாரும் அனுமதி கேட்கவில்லை. திரைப்படம் 9 ந்தேதி தான் வெளியாக உள்ளது. முறைப்படி யார் அணுகினாலும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மறுக்கப்படவில்லை. எங்களுக்கு கட்சி, நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள் என பாகுபாடு கிடையாது. நடிகர் விஜய், அஜித் படங்கள் மற்றும் ரஜினியின் காலா போன்ற படங்களுக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வேண்டும் என்று அரசை அணுகினால் முதல்வரின் ஆலோசனை பெற்று பரிசீலிக்கப்படும் என்றார்.