ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் ஹெல்மெட்' அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இன்று 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டதால் பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும்,விபத்துக்களை குறைக்கவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் அசோசியேஷன் இணைந்து தலைகவசம் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை ஜுன் 1 முதல் (நாளை) தொடங்க உள்ளார்கள்.
இதற்காக திருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் 13 பெட்ரோல் பங்குகளில் "மகிழ்ச்சி நேரம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின்படி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினார்கள். இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாதம் மாதம் நடக்க உள்ளது. மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை 'மகிழ்ச்சி நேரம்' என்ற தலைப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்க உள்ளார்களாம்.