திருமணமாகி ஒன்றரை வருடத்தில் மரணம்.. கதறும் மனைவி.. சோகத்தில் சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் கிராமம்
Recommended Video
தூத்துக்குடி: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களில், ஒருவர் பெயர் சிவச்சந்திரன். மற்றொருவர் சுப்பிரமணியன்.
சிவச்சந்திரன் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்தவர். சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள சவலப்பேரி கிராமத்தை சேர்ந்தவர்.
ஐடிஐ படிப்பு முடித்த சுப்பிரமணியன், முதலில் விவசாயப் பணிகளை பார்த்தார். பிறகு ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார்.
ஒன்றரை வருடங்கள்
5 வருடங்கள் பணியாற்றிய நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக, கிருஷ்ணவேணியுடன் திருமணமானது. சமீபத்தில் ஊருக்கு வந்திருந்த சுப்பிரமணியன், ஒரு மாத விடுமுறையை குடும்பத்தோடு கழித்தார். இந்த நிலையில்தான், சுப்பிரமணியன் கொல்லப்பட்ட தகவலை, அவரது குடும்பத்தாரால் ஏற்க முடியவில்லை.
கிருஷ்ணவேணி கண்ணீர்
அவரது மனைவி கிருஷ்ணவேணி, நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது: ராணுவத்தில் படும் கஷ்டங்களை எனக்கு தெரியாமல் மறைத்துவிடுவார். காஷ்மீரில் ராணுவத்தினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசுவது வழக்கம். அப்படி சமீபத்தில் கல் வீசியதில் எனது கணவர் தலையில் அடிபட்டது.
கஷ்டங்களை மறைப்பார்
இதுபற்றி ஊருக்கு வந்தபோது கேட்டேன். ராணுவத்திற்கு வந்த சரக்குகளை இறக்கினோம் அதுலதான் அடிபட்டது என்று எனது கணவர் சொன்னார். ஆனால் உண்மையை தனது அக்காவிடம் சொல்லியுள்ளார். அவர் சொல்லிதான் எனக்கு தெரியவந்தது.
பெருமை
எனது கணவர் வீரமரணம் அடைந்துள்ளார். நாட்டுக்காக அவரது உயிர் போனது பெருமை என்றாலும், இது சாகக்கூடிய வயதில்லை. கல்யாணம் ஆகி ஒன்றரை வருடத்தில் எனது கணவர் போனது பெரிய இழப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கணவரை நாட்டுக்காக இழந்த கிருஷ்ணவேணிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், அவரது கண்களில் கண்ணீர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என உறவினர்கள் தெரிவித்தனர்.