நாங்கள் தான் காவலாளி... இல்ல, நாங்க தான் காவலாளி... பாஜக vs திமுக
தூத்துக்குடி: நாட்டின் காவலாளி யார் என்பதில், பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டீக்கடைக்காரரில் இருந்து காவலாளி என்ற பிரச்சாரத்திற்கு பாஜக தாவியுள்ளது.
இந்தநிலையில், நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே சூடான விவாதம் தொடங்கி உள்ளது.
தியாகங்களால், ரத்த சரித்திரத்தால் உருவான தொழிலாளர்கள் தினம், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மே தினப் பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.
ஸ்டாலின் பேரணி
பேரணியை தொடர்ந்து, சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4,5 கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
திமுக தான் காவலாளி
விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; நரேந்திர மோடி அல்ல என்று கூறிய மு.க.ஸ்டாலின், கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ள, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். இதுவரை, எந்த ஒரு அரசியல் விமர்சனத்திற்கும், பதிலடி கொடுக்கும் தமிழிசை சௌந்தரராஜன், இதற்கும், கருத்து கூற தவறமாட்டார் என்றே கருதலாம்.
'சௌகிதார்' மோடி
மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, திடீரென தனது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' மோடி என சேர்த்துக்கொண்டார். அதாவது, மக்களின் காவலாளி. இதனை பார்த்து, பாஜகவினர் மோடியைப் போல் சௌகிதார் என்பதை தங்களது பெயருக்கு முன்னால் சமூக வலைதளங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
பாஜக vs திமுக
இந்தநிலையில், காவலாளி யார் என்பதில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளி என்று ஒருபுறம் ஸ்டாலின் கூறி வருகிறார். முன்னதாக, சபாநாயகர் தனபால் மீது தமிழக சட்டபேரவைக்கு நம்பிக்கையில்ல என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, உங்கள் (ஸ்டாலின்) மீது தமிழக மக்களுக்கே நம்பிக்கையில்லை. எனவே தான் எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர். வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது என்று தமிழிசை பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.