போதையில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முயற்சி!- சென்னையில் இருவர் கைது
சென்னை: நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தின்போது, குடிபோதையில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, லயோலா கல்லூரிக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள் வந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்புக்கு போதுமான காவல்துறையினர் இல்லாததால், மதுபோதையில் வந்த இருவர், தங்களை பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு நடிகைகளுடன் செல்பி எடுக்க முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பத்திரிக்கையாளர்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
குடிபோதையில் நடிகைகளுடன் செல்பி எடுத்துக் கொள்ளவே இவ்வாறு பொய் கூறி உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கேமராவை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.