காட்பாடியிலிருந்து ஜார்க்கண்டிற்கு சிறப்பு ரயில்.. 1131 வடமாநிலத்தவர்கள் அனுப்பி வைப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து 2-ம் கட்டமாக தமிழக அரசு செலவில் சிறப்பு இரயில் மூலம் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த 1131 பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகவும், இதர தொழில் செய்யவும் வேலூர் வந்த பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 9903 பேர் கடந்த 40 நாட்களுக்கு முன் வந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசின் நிதியில் நேற்று முன்தினம் , ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1140 பேர் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். 2-ம் கட்டமாக நேற்று இரவு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 1131 பேர் சிறப்பு ரயில் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் ஹந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது.
ஐக்கிய அரபு நாடுகள் டூ சென்னை வந்த சிறப்பு விமானம்.. 359 இந்தியர்கள் மீட்பு
தனியார் மருத்துவமனை
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில், வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக உள்ளதால் அங்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களும் இது தவிர பல்வேறு தொழில் நிமித்தமாக தங்கியுள்ள வடமாநிலத்தார் ஊரடங்கால் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர்.
முதல்வரின் உத்தரவு
அவர்களை தமிழக அரசின் செலவில் சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி முதல்வரின் உத்தரவை அடுத்து முதல் சிறப்பு ரயில் மூலம் கடந்த 6-ஆம் தேதி ஜார்க்கண்டை சேர்ந்த 1140 பேரும், இன்று 1131 பேரும் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம்
இதையடுத்து பீகாரை சேர்ந்த 1300 பேர் நாளையும், மேற்கு வங்கத்தை சேர்ந்த 4500 பேர் 4 ரயில்கள் மூலம் அனுப்ப திட்டமிட்டோம். இதற்கு தென்னக ரயில்வேவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. 1000 பேருக்கு குறைவாக உள்ள மாநிலத்தாரை ரயிலில் அனுப்ப முடியாது என்பதால் மாற்று வழியை அரசுடன் சேர்ந்து ஆலோசித்து வருகிறோம்.
தனிமை
பெரும்பாலும் சென்னைக்கு அனுப்பி அங்கிருந்து மற்ற ரயில்களில் கலந்து அனுப்ப வாய்ப்புள்ளது. இதுவரை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 60 பேர் வேலூருக்கு வந்துள்ளார்கள். அவர்களை 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். அதிகம் பாதித்த மாநிலத்தில் இருந்து வருவோரை மண்டபத்தில் தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வெளிமாநிலம்
வேலூரை சேர்ந்தவர்கள் வெளிமாநிலத்தில் இருந்தால் இ பாஸ் மூலம் பதிவு செய்யவேண்டும். அதே சமயம் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை வரவேற்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. வேலூரில் இருந்து கோயம்பேடு போகும் கீரைகளை தடுத்து நிறுத்தவுள்ளோம். அவற்றை இங்கேயே விற்பனை செய்ய திட்டமிட்டோம் என அவர் கூறினார்.