வேலூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை சீரழித்த 5 பேர் கும்பல்... தந்தையை அவமானப்படுத்த வெறிச்செயல்
வேலூர்: ஒடுக்கத்தூர் அருகே 7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி குடும்பத்திற்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் 14வயது சிறுமியின் தந்தையை பழிவாங்குவதற்காக ஆண்டியின் மகன் குமார்(32) மாணவியை இரவு நேரத்தில் பலவந்தமாக கடத்தி சென்றாராம்.
தந்தை அதிர்ச்சி
இந்நிலையில் நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது மகளை காணாததால் மாணவியின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடி பார்த்த அவர் மகளை காணாமல் வேதனையில் இருந்துள்ளார்.
படுகாயம்
இந்நிலையில் ஆண்டியின் உறவினர் ரவி வீட்டில் அவரது மகள் இருப்பதை அறிந்த அவர், அங்கு துரைச்சாமி மற்றும் சுரேஷ் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்று மீட்க முயன்றுள்ளார். அப்போது நடந்த சண்டையில் ஆண்டி மகன் குமார், சிறுமியின் உறவினர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டாராம். இதில் படுகாயம் அடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி மீட்பு
இதன்பின்னர் மாணவியை மீட்டு அவர்கள் அழைத்து வந்தனர். அப்போது 14 வயது மாணவி தன்னை, ஆண்டி, சேட்டு, அண்ணாமலை, ரவி, வேலு ஆகிய ஐந்து பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து வேப்பங்குப்பம் போலீசார் மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானால் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றனர். தற்போது குற்றம்சாட்டப்படும் 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.