சாண எரு பள்ளத்தில் தேங்கிய மழை நீர்.. 2 சிறுமிகள் மூழ்கி பலி.. வேலூரில் சோகம்!
மழை நீர் தேங்கிய வெள்ளத்தில் விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனர்
வேலூர்: சாண எருவுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் இரண்டு சிறுமிகள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
ஒடுகத்தூர் அடுத்த கேஜி ஏரியூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த தம்பதி வேல்முருகன் - ஸ்ரீபா. இவர்களுக்கு 6 வயதில் ஹரிணி, 3 வயதில் பிரித்திகா என்ற பெண் குழந்தைகளும், 3 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
வேல்முருகனுக்கு சொந்தமாக வீட்டு பக்கத்திலே விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் அருகே மாட்டு சாணம் கொட்டி வைத்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன்புதான் அந்த சாணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் அந்த இடத்தில் 4 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனிடையே கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்யவும், நிலத்தில் தேங்கிய மழைநீர், அங்கிருந்த 4 அடி பள்ளத்தில் ஓடி விழுந்து நிரம்பியது. அதனால் அந்த பள்ளம் தண்ணீரால் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் மழையில் ஹரிணியும், பிரித்திகாவும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக 2 பேருமே இதில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டனர். விளையாட போன குழந்தைகள் வரவில்லையே என்று வீட்டில் உள்ளவர்கள் தேடியபோதுதான், பள்ளத்தில் 2 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.
தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 சடலங்களையும் மீட்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி கலெக்டர் சண்முக சுந்தரம் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.