இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன்.. வேலூர் வேட்பாளர் ஏசி சண்முகம் வாக்குறுதி!
Recommended Video
வேலூர்: குடியாத்தத்தை அடுத்த மோடி குப்பம் பகுதியில் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக இருப்பேன் என்றும் அனைத்து தரப்பட்ட மக்களின் நலன்களை கேட்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் என்றும் ஏசி சண்முகம் பிரசாரம் செய்தார்.
அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ சி சண்முகம் குடியாத்தம் உள்ளிட்ட தட்டப்பாறை செங்குன்றம், மோடிகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
ஒவ்வொரு தொகுதிக்கும் 2 கோடி ரூபாய் செலவில் திருமண மண்டபங்களை கட்டித் தருவேன். நமது தொகுதி மக்கள் அனைவரும் இலவசமாக திருமணங்களை செய்து கொள்ளலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மாணவர்கள் அனைவரும் கல்வி பெற இலவச சைக்கிள் இலவச பாடப் புத்தகம், விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
அதன் வழியில் குடியாத்தம் பகுதியில் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் உயர் படிப்பிற்கு எனக்கு சொந்தமான கல்லூரிகளில் அவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு அனைத்து செலவினையும் நானே ஏற்றுக் கொள்வேன். என்னுடைய தாயார் போதிய அளவிற்கு மருத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் முப்பத்தி எட்டு வயதிலேயே இறந்து போனார்.
தாயில்லாத பிள்ளையாக என்னை தவிக்க விட்டுச் சென்றார். அதுபோன்ற நிலை எந்த ஒரு தாய்க்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. யாருடைய பிள்ளைகளும் தாயில்லாத பிள்ளைகளாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எனது தாயார் பெயரில் இயங்கி வரும் பெங்களூர் மருத்துவமனையில் இங்கு இருக்கின்ற தாய்மார்கள் அனைவரும் இலவச மருத்துவ உதவியும் அவசியப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளலாம்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தி அதன் மூலம் நோய்களை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று பேசினார். அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிப்பதன் மூலம் என்னை மக்களவை உறுப்பினராக்கினால் அதன் மூலம் நம் நாட்டின் பாதுகாவலனாக மோடியை பிரதமராக்க நீங்கள் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.