நள்ளிரவில் 5 பேர்.. கதறிய பெண் மருத்துவர்! வேலூரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! பாய்ந்தது குண்டாஸ்
வேலூர் : நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவரை கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததோடு, அப்பெண் வைத்திருந்த செல்போன், பணம் மற்றும் நகையை பறித்து சென்ற கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது .
இஸ்லாமிய பெண்களுக்கு பாலியல் மிரட்டல்! 11 நாட்களுக்கு பின்.. உ.பி சாமியார் பஜ்ரங் முனி தாஸ் கைது

வேலூரில் அதிர்ச்சி
இதையடுத்து முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்ததை கேட்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த நிலையில். நேற்று மத்தியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது.

போலீசில் புகார்
அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 - ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 01.00 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும் , அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும் , தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும் கூறியுள்ளனர். அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள் , பணம் சுமார் ரூ . 40,000 / மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும் , மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி குறிப்பிட்டிருந்தார்.

ஷேர் ஆட்டோ
இது தொடர்பாக காவல்துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், வேலூர் காட்பாடியில் திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்க செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏறுங்க என கூறியுள்ளனர். ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏடிஎம் கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றதாக தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது
கைதான இளம் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட நிலையில், சந்தோஷ் பார்த்திபன் மணிகண்டன் பரத் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய சிறுவனை தவிர சந்தோஷ் பார்த்திபன் மணிகண்டன் பரத் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவர்களது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.