‘ஒன் மேன் ஆர்மிக்கு‘ சீமந்தம்: பிரியாணி விருந்து.. ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள்.. வேலூரில் ருசிகரம்!
வேலூர்: வேலூர் அருகே மாட்டுக்கு அதன் உரிமையாளர் சீமந்தம் நடத்திய நிகழ்வு அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு 7 அல்லது 9வது மாதத்தில் சீமந்தம் எனும் வளையகாப்பு நடத்துவது வழக்கம். சீமந்தம் செய்வதால் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள திரிஷ்டி நீங்கும், குழந்தைக்கு தாயின் வளையல் சத்தம் கேட்டு பயத்தை போக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காகவே நம் முன்னோர்கள் காலம் காலமாய் கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் என்ற சடங்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் அருகே இளைஞர் ஒருவர் தான் வளர்த்த பசு மாட்டுக்கு சீமந்தம் நடத்தியிருப்பது அப்பகுதி மக்களை வியப்படைய வைத்துள்ளது.
பசு மாடு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்டரன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் குமார். 37 வயதான இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். குமார் தனது வீட்டில் வளர்த்து வரும் மாடு ஒன்றை மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க வைத்து வந்துள்ளார்.
ஒன் மேன் ஆர்மி
இதுவரை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்த தனது மாட்டிற்கு "ஒன் மேன் ஆர்மி" என்று குமார் பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு கர்ப்பம். குமார் வீட்டில் பெண்கள் இல்லாததால் தனது மாட்டிற்கு மனிதர்களைப்போல ஊரை அழைத்து சீமந்தம் நடத்த குமார் முடிவு செய்துள்ளார்.
குமார் சபதம்
இதைக் கேட்ட குமாரின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் மாட்டுக்கு சீமந்தம் நடத்தினால் ஊர் பொதுமக்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் யார் சிரித்தாலும் பரவாயில்லை. நிச்சயம் எனது மாட்டிற்கு ஊரை அழைத்து வளைகாப்பு நடத்துவேன் என குமார் சபதம் செய்துள்ளார்.
தடபுடலாக சீமந்தம்
அதன்படி சீமந்தம் நடத்த முடிவு செய்து ஊர் பொது மக்களுக்கு குமார் வீடுவீடாகச் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இதை கேட்ட மக்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். திட்டமிட்டபடி நேற்று குமார் தனது மாட்டிற்கு சீமந்தம் ஏற்பாடுகளை தடபுடலாக செய்தார்.
பிரியாணி விருந்து
அதன்படி ஊரில் உள்ள மைதானத்தில் பந்தல் போடப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டது. மாட்டிற்கு சீமந்தம் என்பதால் அதைக்காண ஊர் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருந்தனர். நேற்று மாலை 6 மணியளவில் குமார் வீட்டில் இருந்து ஒன் மேன் ஆர்மி எனப்படும் அந்த மாடு மாலை மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
தாம்பூலத்தில் சீர்
அதேபோல் பெண்களுக்கு சீமந்தம் நடத்தும்போது தாம்பூலத்தட்டுகளில் பழங்கள் வைத்துக்கொண்டு வருவது போல் நேற்று தட்டுகளில் சீர் எடுத்து வந்தனர். மேளதாளங்களுடன் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது. ஊர்வலமாக விழா பந்தலுக்கு மாடு அழைத்து வரப்பட்டது.
வளையல் போட்டு சீமந்தம்
பின்னர் அங்கு பெண்கள் மாட்டிற்கு சந்தனம் குங்குமம் பூசி சீமந்த சடங்குகளை செய்தனர். பெண்களுக்கு வளையல் போடுவது போல் மாட்டிற்கும் வளையல் போட்டு சீமந்தம் நடத்தினர். பின்னர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது.
நெகிழ்ச்சி
பணம் அதிகம் செலவாகும் என்பதால் பெற்ற பிள்ளைகளுக்கே சீமந்தம் நடத்த தயங்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் குமார் தான் ஆசையாக வளர்த்து வரும் மாட்டுக்கு சீமந்தம் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் பெண்கள் இல்லை
இதுகுறித்து குமார் கூறுகையில், நான் வளர்த்து வரும் இந்த மாடு மஞ்சுவிரட்டு போட்டிகளில் 50 க்கும் மேற்பட்ட பரிசுகளை பெற்றுள்ளது. அதனால் ஒன் மேன் ஆர்மி என பெயர் வைத்துள்ளோம். எனது வீட்டில் எனது பெற்றோருக்கு பெண் குழந்தை இல்லை.
பிள்ளை போல் வளர்ப்பேன்
எனவே தங்கை இல்லாத குறையைப் போக்கும் வகையில் எனது மாட்டிற்கு சீமந்தம் நடத்த ஆசைப்பட்டேன் மாடு கன்று குட்டி ஈன்றதும் அதையும் என் பிள்ளை போல் வளர்ப்பேன். சீமந்த நிகழ்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் பணம் செலவு செய்துள்ளேன் பணம் எனக்கு முக்கியமில்லை நான் ஆசையாக வளர்த்த மாடு தான் முக்கியம் வளைகாப்பு நடத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.