வேலூர் தேர்தல் ரத்து உறுதியானது... ஏசி சண்முகம் மனு தள்ளுபடி.. ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Recommended Video
சென்னை: வேலூரில் தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வேலூர் தொகுதியில் அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி, தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த பரித்துரையை ஏற்று நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதற்கு வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ரத்து அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தேர்தல் ரத்தா.. வீட்டு வாசல் நிலைப்படியை ஒரு கையால் ஸ்டைலாக பிடித்தபடி பேட்டி தந்த தில் துரைமுருகன்
உயர்நீதிமன்றத்தில் முறையீடு
இந்நிலையில் வேலூரில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகம், தேர்தல் ரத்தால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி நாளை வேலூரில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
தேர்தலை நிறுத்த எதிர்ப்பு
இந்த வழக்கு சற்று முன்பாக அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். ஏசி சண்முகம் தரப்பு பணப்பட்டுவாடாவுக்காக தேர்தலை நிறுத்தக் கூடாது என்றும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என வாதிட்டது.
தகுதி நீக்கம் முடியாது
இதற்கு நீதிபதிகள், தேர்தல் ரத்து செய்யப்படக்கூடாது என்றால், பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளையே தகுதி நீக்கம் செய்ய முடியும் என்றும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தல் நடக்குமா?
வழக்கில் வாதங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று மாலைக்கு தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தனர். இந்நிலையில் வேலூரில் தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தலையிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிராக தொடர்ந்து மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.