யாரும் தப்ப முடியாது.. பாத்ரூமில் விழுந்து கை உடையத்தான் செய்யும்.. ராஜேந்திர பாலாஜி தடாலடி
வேலூர்: யார் தவறு செய்தாலும், பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும் என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, இன்று ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு நடுவே, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:
ஸ்டாலின் தலைமையில் ஆம்பூரில் அனுமதி வாங்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். சிறிய அளவில் கூட்டம் நடந்திருந்தாலும் தேர்தல் காலத்தில் அனுமதி வாங்கிவிட்டுத்தான் நடத்தியிருக்க வேண்டும் என்ற நிலையில், இந்த அடிப்படை அறிவு கூட திமுகவுக்கு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.
பாத்ரூம்
திமுக என்ன சொன்னாலும் மக்கள் கேட்டுக்கொள்ள வேண்டுமா? சட்டம் யாராக இருந்தாலும் தன் கடமையை சரியாக செய்யும். அதிமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையத்தான் செய்யும்.
கட்சி பாகுபாடு இல்லை
திமுகவினர் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அப்படித்தான் இருக்கும். தப்பு செய்துவிட்டு யாரும் தப்ப முடியாது. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
ரூட் தல
சென்னையில் ரூட் தல மோதலில் ஈடுபட்டு நடு ரோட்டில் வீச்சரிவாள்களை கொண்டு தாக்கிய மாணவர்கள் போலீஸ் விசாரணையின்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக போலீசார் அறிவித்ததோடு, புகைப்படங்களையும் வெளியிட்டனர்.
சர்ச்சை
இதேபோல திருநெல்வேலியிலும் கலாட்டா செய்த ஒரு ரவுடி கை உடைபட்ட போட்டோ வைரலானது. இதேபோன்ற 'பாத்ரூம்' சம்பவங்களுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மனிதநேயர்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.