எம்.பியுடன் லடாய்.. அதிமுக மா.செவை தூக்கிய போலீஸ்- வெளியே வர முடியாத வழக்குகளில்.. பதறிய தொண்டர்கள்!
வேலூர் : காட்பாடியில் புதிதாக சீரமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை அனுமதியின்றி தன்னிச்சையாக ரிப்பன் வெட்டி திறந்த அதிமுக மாவட்ட செயலாளர் அப்புவை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தன்னிச்சையாக ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்புவை போலீசார் கைது செய்தனர். இதைக் கண்டித்து அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதக் கலவரத்தை தூண்டும் திமுக எம்.எல்.ஏ.. அவரால்தான் ஆரம்பிச்சது - கலெக்டரிடம் பாஜக பரபரப்பு புகார்!
காட்பாடி மேம்பாலம்
தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் முக்கிய பாதையாக அமைந்துள்ள மங்களூர் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் காட்பாடி வாழியாக செல்லும் சாலையின் இடையே காட்பாடி ரயில் நிலையத்தின் மீது அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இப்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு செய்வதற்காக கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் மேம்பாலம் வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு முதல் கட்டமாக இன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், 4ஆம் தேதி முதல் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும் என வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல் காட்பாடி மேம்பாலம் இது இரு சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.
ரிப்பன் வெட்டும் போராட்டம்
முன்னதாக, இன்று காலை தன்னிச்சையாக இந்தப் பாலத்தை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தனது கட்சியினருடன் சேர்ந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். காட்பாடி தொகுதியில் போதிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் மிகவும் காலதாமதமாக மேம்பாலம் சீரமைப்பு பணி நடைபெற்றது என்றும் அதனை கண்டிக்கும் வகையில் ரிப்பன் வெட்டும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
பரபரப்பு
இந்நிலையில் அங்கு திரண்டு வந்த திமுகவினர், திமுக எம்.பி. கதிர் ஆனந்த்தின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சீரமைக்கப்பட்ட மேம்பாலத்தை, அதிமுகவினர் முன்கூட்டியே திறந்ததை கண்டித்து அங்கிருந்த அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தலையிட்டு கலைத்தனர். மேலும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் அறிவுறுத்தலின்படி போலீசிலும் அதிகாரிகள் புகார் அளித்தனர்.
கைது
அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு மீது வருவாய்த்துறையினர் புகார் அளித்ததன் பேரில் காட்பாடி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அப்புவை அவரது வீட்டுக்கே சென்று விசாரித்த போலீசார் அவரைக் கைது செய்து காட்பாடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவினர் மறியல்
வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் தூண்டுதலின் பேரில் போலீசார், அத்துமீறுவதாக குற்றம்சாட்டி, அதிமுக மா.செ கைது செய்யப்பட்டதை கண்டித்து கதிர் ஆனந்த் வீட்டிற்கு முன்பாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்புவின் உறவினர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடி காவல் நிலையம் எதிரிலும் அதிமுகவினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில்
இந்நிலையில் கரசமங்கலம் வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி நுழைதல், அச்சுறுத்தல் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும் செயலில் ஈடுபடுதல், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சட்டவிரோதமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காட்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் நான்கு பிரிவுகள் பிணையில் வரமுடியாத பிரிவுகளாக உள்ளது.