"பட்டியலினம் என்பதால் செருப்பை தூக்க வைத்தேனா.. சாதி பார்த்ததில்லை" ஆம்பூர் திமுக எம்எல்ஏ விளக்கம்
ஆம்பூர் எம்எல்ஏ தன் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார்
வேலூர்: "பட்டியலினம் என்பதால் அந்த நிர்வாகியை செருப்பை தூக்க வைத்தேன் என்று சொல்வது சரியில்லை.. நான் சாதி பார்த்து பழகியது கிடையாது!" என்று ஆம்பூர் திமுக எம்எல்ஏ தன் சர்ச்சை குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த 1-ந் தேதி பெய்த கனமழையால் ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னப்பள்ளி ஏரிக்கரையை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் பார்வையிட வந்துள்ளார்.
அவருடன் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர், உட்பட திமுகவை சேர்ந்த ஏராளமானோர் சென்றுள்ளனர்.. அது ஏரிக்கரை பகுதி என்பதால், சேறும் சகதியுமாக அந்த பகுதி உள்ளது.
அடேங்கப்பா.. கொரோனாவிலும் ரணகளமா.. சங்கர் போட்டுள்ள மாஸ்க் விலை என்ன தெரியுமா
எம்எல்ஏ
அதனால் எம்எல்ஏவால் வேகமாக அங்கு நடக்க முடியவில்லை போலும்.. அவருடைய செருப்பு ஊராட்சி செயலாளர் கையில் இருந்தது.. செருப்பை இவர் பின்னாடியே கையில் எடுத்துக்கொண்டு போக, முன்னாடியே எம்எல்ஏ செல்கிறார்.. இதை அந்த கூட்டத்தில் இருந்த யாரோ சிலர் வீடியோவாக எடுத்ததுடன் வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டுவிட, இந்த வீடியோ வைரலானது.. இது எதேச்சையானதுதான் என்றாலும், பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
செருப்பு
"பட்டியலின சமூக நிர்வாகியை செருப்பைத் தூக்கி வரச்சொல்லியிருக்கிறார் எம்எல்ஏ.. சமூக நீதி பேசும் திமுகவின் உண்மை முகம் இதுதான்" என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலானது.. வில்வநாதன் மீது நிறைய விமர்சனங்களையும் தாங்கி வந்தது.. ஆனால், நடந்த சம்பவத்துக்கும், அந்த வீடியோ பதிவுக்கும் சம்பந்தமில்லை என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
வேட்டி
எம்எல்ஏ செருப்பை சுமந்த ஊராட்சி செயலாளர் சங்கர் இதை பற்றி சொல்லும்போது, "எம்எல்ஏ வில்வநாதன், பேரணாம்பட்டு தெற்கு ஒன்றிய செயலாளராகவும் இருக்கிறார்... என் மனைவி அனிதா ஒன்றிய துணை செயலாளராக இருப்பதால், நான் எப்போதுமே எல்எல்ஏவுடன்தான் இருப்பேன்.. அந்த பாதை சரியில்லை.. சேறு இருந்தது. அந்த இடம் வழுக்கும் என்பதால், செருப்பை ஓரமாக கழற்றிவிட்டு, வேட்டியையும் பிடித்து கொண்டு, நடந்தார்.
விளக்கம்
பின்னால் வந்த நான்தான் செருப்பை வாங்கி கொண்டேன்.. எம்எல்ஏ என்னை செருப்பை எடுத்து வர சொல்லவில்லை. என் கையில இருந்ததுகூட அவருக்கு தெரியாது. அப்பறம்தான் பார்த்து, கீழே போட சொன்னார்.. இது யாரோ உள்ளடி வேலை பார்த்துள்ளனர். நான் பட்டியலினம்.. ஆனால் எம்எல்ஏ சாதி பார்த்து பழக மாட்டார். என்னை பகடையாக வைத்து அவரது வளர்ச்சியை யாரோ தடுக்கிறார்கள்.. என் வீட்டுக்கும் அவர் அடிக்கடி வருவார்... சேர்ந்துதான் சாப்பிடுவோம்" என்றார்.
பட்டியலினம்
இந்த சர்ச்சை குறித்து எம்எல்ஏ கூறும்போது, நான் எல்லாரிடமும் இயல்பாகதான் பழகி வருகிறேன்.. சாதி பார்த்தது இல்லை.. பட்டியலின சமுதாய நிர்வாகியை செருப்பை தூக்க வைத்தேன்னு செய்திகள் வருது.. அதை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு.. இத்தனை வருஷ பொது வாழ்க்கையில் என் மீது சின்ன கறை கூட பட்டதில்லை.. யாரோ இதை பெரிசு பண்றாங்க.. நீங்க என்னை பத்தி எங்க வேணும்னாலும் கேட்டு பாருங்க.. என் மேல தப்பு இருந்தால் சொல்லுங்க, என் குற்றச்சாட்டை ஏத்துக்கறேன்" என்று குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.