செருப்பு விலை ரூ.6,500.. அதான் பட்டியலினத்தவரை எடுத்து வர சொன்னார்.. தீராத சிக்கலில் ஆம்பூர் எம்எல்ஏ
வேலூர்: "திமுக எம்எல்ஏவின் செருப்பின் விலை ரூ.6,500.. அதனால்தான் சேற்றில் படக்கூடாது என பட்டியலின சமூக நிர்வாகியை தூக்கி வர சொல்லி இருக்கிறார்" என தலித் அமைப்பின் நிர்வாகிகள் ஆவேசமாக கூறுகிறார்கள்... மேலும், எம்எல்ஏவை கண்டித்து இந்திய குடியரசுக் கட்சி சார்பில் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை என 3 இடங்களில் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 1-ந் தேதி பெய்த கனமழையால் ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னப்பள்ளி ஏரிக்கரையை ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் பார்வையிட வந்தார். அவருடன் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர், உட்பட திமுகவை சேர்ந்த ஏராளமானோர் சென்றுள்ளனர்.. அது ஏரிக்கரை பகுதி என்பதால், சேறும் சகதியுமாக இருந்தது.
பிறகு, அவருடைய செருப்பினை ஊராட்சி செயலாளர் கையில் பிடித்தபடி செல்ல, அவருக்கு முன்பு எம்எல்ஏ நடந்து சென்று கொண்டிருக்கிறார்.. இதை அந்த கூட்டத்தில் இருந்த யாரோ சிலர் வீடியோவாக எடுத்ததுடன் வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டுவிட, இந்த வீடியோ வைரலானது.. சர்ச்சையும் வெடித்தது.
"பட்டியலின சமூக நிர்வாகியை செருப்பை தூக்கி வரச்சொல்லியிருக்கிறார் எம்எல்ஏ.. சமூக நீதி பேசும் திமுகவின் உண்மை முகம் இதுதான்" என்ற கேப்ஷனுடன் இணையத்தில் வீடியோ வைரலானது.. இதையடுத்து, எம்எல்ஏ செருப்பை சுமந்த ஊராட்சி செயலாளர் சங்கர் இதை பற்றி சொல்லும்போது, "நான் எப்போதுமே எல்எல்ஏவுடன்தான் இருப்பேன்.. அந்த பாதை சரியில்லை.. சேறு இருந்தது. அந்த இடம் வழுக்கும் என்பதால், செருப்பை ஓரமாக கழற்றிவிட்டு, வேட்டியையும் பிடித்து கொண்டு, நடந்தார். பின்னால் வந்த நான்தான் செருப்பை வாங்கி கொண்டேன்.. எம்எல்ஏ என்னை செருப்பை எடுத்து வர சொல்லவில்லை" என்றார்.
இந்த சர்ச்சை குறித்து எம்எல்ஏ வில்வநாதன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்து பேசினார்.. "சாதி பார்த்தது இல்லை.. பட்டியலின சமுதாய நிர்வாகியை செருப்பை தூக்க வைத்தேன்னு செய்திகள் வருது.. அதை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு.. இத்தனை வருஷ பொது வாழ்க்கையில் என் மீது சின்ன கறை கூட பட்டதில்லை.. யாரோ இதை பெரிசு பண்றாங்க.. நீங்க என்னை பத்தி எங்க வேணும்னாலும் கேட்டு பாருங்க.. என் மேல தப்பு இருந்தால் சொல்லுங்க, என் குற்றச்சாட்டை ஏத்துக்கறேன்" என்றும் கூறியிருந்தார்.
கொரோனா சிகிச்சை மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை - டாக்டர் சரவணன் எம்எல்ஏ
எம்எல்ஏ விளக்கம் தந்தும், இந்த விவகாரம் முற்றுப்பெறவில்லை.. "அவரோட செருப்பின் விலை ரூ.6,500.. அதனால்தான் சேற்றில் படக்கூடாது என பட்டியலின சமூக நிர்வாகியை தூக்கி வர சொல்லி இருக்கிறார்" என தலித் அமைப்பின் நிர்வாகிகள் ஆவேசமாக கூறுகிறார்கள், எம்எல்ஏவை கண்டித்து இந்திய குடியரசுக் கட்சி சார்பில் வேலூர், குடியாத்தம், ராணிப்பேட்டை என 3 இடங்களில் இன்றும், ஆம்பூரில் நாளையும் போராட்டம் நடைபெறுகிறது.
இதை பற்றி அவர்கள் சொல்லும்போது, "இவங்க எப்படி வேணும்னாலும் விளக்கம் தரலாம்.. 2 பேருமே திமுகவில் இருக்கிறார்கள்.. அன்னைக்கு நடந்ததுக்கும், இந்த விளக்கங்களுக்கும் சம்மந்தமே இல்லை.. சமூக நீதிக்கு எதிராக பிரச்னை வரும் போதெல்லாம் கண்டனத்தை பதிவு செய்து வருகிறோம்.. மற்றபடி எம்எல்ஏ மீது தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த பகையும் கிடையாது.. எதேச்சையாக நடந்திருந்தால்கூட, ஒரு வருத்தமும் சொல்லவில்லை.. மீடியா முன்பு எம்எல்ஏ. நடிக்கிறார்" என்கிறார்களாம்.