டீ குடிக்க வருபவர்களுக்கு ப்ரீயா தூக்குவாளி.. அசத்தும் ஆம்பூர் சேட்டு!
கடைக்கு வருபவர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளி தருகிறார் ஆம்பூர் சேட்டு.
ஆம்பூர்: டீ குடிக்க வர்றவங்களுக்கு ஃப்ரீயா தூக்குவாளிகளை கொடுத்து அசத்தி வருகிறார் ஆம்பூர் சேட்டு!
பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சொல்லிவிட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் மக்கள் எல்லோருமே இதை சீரியஸாக எடுத்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
முடிந்த அளவுக்கு அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர், பிளாஸ்டிக்கை ஒழிக்க சுயமாகவே பல நல்ல ஐடியாக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
டிபன் பாக்ஸ்கள்
ஒருசில ஹோட்டல்களில் டிபன் பாக்சை கல்லா முன்னாடி அடுக்கி வைத்து கொண்டு, அதில் சாப்பாடு பார்சல் செய்து தருகிறார்கள். இதற்கு முன்பணம் வாங்கி கொண்டோ அல்லது விலைக்கோ தந்து வருகிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிளாஸ்டிக் கப்
ஆனால் ஆம்பூர் சேட் எல்லாரையும் விட ஒரு படி மேல போய்விட்டார். ஆம்பூரில் நியூ பெத்லகேம் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர்தான் சேட்டு. 4 வருடமாக இந்த கடையை நடத்தி வருகிறாராம். பொதுவாக டீ கடைகளில் கப்களில் டீ நிரப்பி தருவார்கள். சுட சுட வழிந்து நிறையும் அந்த பிளாஸ்டிக் கப்பை பிடிக்க வாட்டம் இல்லாமல், கீழேயும் மேலயும் ஊத்திக் கொண்டு குடிச்சு முடிச்சி கசக்கி எறிந்துவிட்டு வருவோம்.
சேட்டு - வேற லெவல்
ஆனால் சேட் வேற லெவல்ல நின்னு யோசிச்சிருக்கார். டீக்கடையில் தனது சொந்த செலவில் எவர்சில்வர் தூக்குவாளிகளை வாங்கி வைத்து அதில் டீ கொடுத்து வருகிறார். அடுக்கி வைத்திருக்கிறார். வாடகைக்கு இல்லை...
150 தூக்குவாளி
வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தனது கடைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இதுவரைக்கும் 150 தூக்குவாளிகளை தந்திருக்கிறார் சேட்டு.
கஸ்டமர்கள் முக்கியம்
அதோடு டீ பார்சல் கேட்டு வருபவர்களுக்கு இந்த தூக்குவாளியில் டீ ஊற்றி கொடுத்து அனுப்புகிறார். இதுபற்றி சேட்டு சொல்லும்போது, "கஸ்டமர்கள் எங்களை விட்டு போய்டக்கூடாது என்பதற்காகவும் இந்த ஐடியாவை செய்து வருகிறோம், எங்களுக்கு இதனால் நல்ல பேரும் கிடைச்சிட்டு வருது" என்கிறார்.
எவர்சில்வர் தூக்குகளை ஃப்ரீயா தந்துட்டு இருக்கும் டீக்கடை ஓனர் சேட்டுக்கு கூட்டம் கூடிவருகிறது.