தன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி
ரஜினி சர்ச்சை குறித்து அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்
வேலூர்: "ஒரு விவசாயி என்று தன்னை பலமுறை சொல்லி கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. அதனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மாட்டார் என்று நம்புகிறோம், அதேபோல, 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே கூட்டணியில் உள்ள பாமக, நேரடியாகவே அடுத்தடுத்த விஷயங்களில் அதிமுகவை கேள்வி கேட்டு வருவது அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
வாலாஜாவில் பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதில், பாமக நிறுவனர் தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் பேசும்போது 5ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.. அத்துடன் தமிழக அரசுக்கும் இது சம்பந்தமான வேண்டுகோளை விடுத்தார்... அதிலும் முதல்வர் எடப்பாடியாரை 2 விஷயங்களில் நேரடியாகவே குறிப்பிட்டு அன்புமணி பேசி, தன் கருத்தையும், வேண்டுகோளையும் எடுத்து வைத்தார். அவர் பேசியதாவது:
5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுதேர்வு தேவையற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று விதிகள் இருந்தது. ஒருசில நபர்களால் கொள்கை முடிவை மாற்றியமைத்துள்ளனர். கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோர்களுடைய வேலையை பார்ப்பார்கள்.
இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும் சூழல் வரும். உடனடியாக தமிழக அரசு இதனை திரும்ப பெற வேண்டும். இதனால் கல்வி தரம் உயரும் என்றால் நிச்சயமாக கிடையாது. இதனால் கடுமையான பின்னடைவுதான் வரும். குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும் சூழல் ஏற்படும். இதனை கடுமையாக பாமக எதிர்க்கும் வரும் 28-ந்தேதி சென்னையில் 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது.
அதேபோல, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை 4 உரிமம் வழங்கியுள்ளதை பாமக. எதிர்த்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சியும் மேற்கொள்கிறது. இதை தடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை சந்தித்து பல முறை மனு கொடுத்தோம். முதல்வர் ஒரு விவசாயி என்று பலமுறை சொல்லி கொள்கிறார்.. இதனால் கண்டிப்பாக இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மாட்டார் என நம்புகிறோம். காவிரி டெல்டா பகுதியில் அந்த மண் உணவு அளித்திருக்கிறது. அதனை பாதுகாப்பு கொண்டு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய செயலை பாமக கண்டிக்கிறது... பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நீதி நமக்கு கிடைத்திருக்காது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பலவகை போராட்டங்களை நடத்தி வந்தவர் பெரியார்... பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்து இருக்கலாம்... நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன.. இந்த சம்பவங்கள் நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன... இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து 50 வருஷம் கழித்து, அப்போது நடந்ததை இன்றைய சூழலுக்காக விவாதம் செய்வது தேவையில்லாதது" என்றார்