பாலாற்றில் தடுப்பணையை உயர்த்தும் ஆந்திரா.. மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை.. விவசாயிகள் புகார்
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
பாலாற்றின் கங்குந்தி என்ற இடத்தில் 22 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 40 அடியாக அதிகரிக்கும் பணியில் ஆந்திர அரசு இறங்கியுள்ளது. ஆனால் இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும்.
தமிழக அரசு தலையிட்டு பாலாறு தடுப்பணை உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய தேசிய நீர்நிலை பாதுகாப்பு குழு பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டனர்.
பாலாறு என்பது வேலூர் மாவட்டத்திற்கு முத்தாய்ப்பாக இருக்க கூடிய ஆறு. இதில் உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து ஆந்திர அரசை கண்டிக்க வேண்டும், மேலும் தமிழக அரசு இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆந்திர அரசு பாலாற்றில் மேலும் 33 இடங்களில் தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். ஆந்திர அரசின் நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுக்க தவறினால், விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.