வேலூர் தேர்தல் அன்று வெளியான '370 ரத்து அறிவிப்பு'.. ஏசி சண்முகத்தின் பெரும் சோக பின்னணி
வேலூர்: வேலூர் தேர்தல் நடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தான் ஜம்மு காஷ்மீருக்கான 370 வது சட்டப்பிரிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இந்த காரணம் உள்பட சில காரணங்களால் பாஜகவின் கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகம் தனக்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்காமல் போய்விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்ட்ட வேலூர் லோக்சபா தேர்தல் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மீண்டும் நடந்தது. ஆனால் அன்று தான் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வேலூர் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் வேதனை தெரிவித்துள்ளார்.
உண்மையில் வேலூர் தேர்தல் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏசி சண்முகம் தான் முன்னிலையில் இருந்தார். சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலையில் இருந்தார்.
ஆனால் இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் உள்பட தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால் அப்படியே தலைகீழாக மாறியது.
வாணியம்பாடியில் அதிமுகவை விட, திமுகவுக்கு, 22 ஆயிரம் 351 வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆம்பூர் தொகுதியில் 8 ஆயிரத்து 603 வாக்குகளும், வேலூரில், 6 ஆயிரத்து 275 வாக்குகளும், திமுகவிற்கு கூடுதலாக கிடைத்தன. இதன் காரணமாகவே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். ஏசி சண்முகம் தோற்றுப்போனார். அதேநேரம் குடியாத்தம் தொகுதியில், திமுகவை விட, 11 ஆயிரத்து 53 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது அதிமுக. அணைக்கட்டு தொகுதியில் 9ஆயிரத்து 222 வாக்குகளும், கே.வி.குப்பம் தொகுதியில் 8 ஆயிரத்து 103 வாக்குகளும், அதிமுக அதிகம் பெற்றது.