கமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு
வேலூர்: மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று பேசி இந்து மதத்தை புண்படுத்தியதாக, கமலுக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த விஜயபாரத மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் உட்பட பல அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதே நேரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனுக்கு எதிராக காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்.
இந்தநிலையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், காமராஜர் நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக, விஜயபாரத மக்கள் கட்சியினர் கருப்பு கொடி காட்டினர். இதனால், திடீரென பரபரப்பு ஏற்பட்டது.