அசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம்
வேலூர்: அசாமில் தற்கொலை செய்து கொண்ட எல்லை பாதுகாப்புப்படை வீரரின் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரான வேலூரில் அடக்கம் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் ராஜேஷ் வயது(38). இவர் அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு பணியில் இருந்த போது மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்டமாக தெரியவருகிறது.
இந்நிலையில் அவரது உடல் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் பாரதி நகருக்கு ராணுவ வீரரின் உடல் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் பாரதி நகர் சுடுகாட்டில் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. பணியின்போது மன அழுத்தத்தின் காரணமாக இறந்த ராஜேசுக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும் ஜனனி(6) சாய் கிருஷ்ணன்(2) என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இறுதியில் ராஜேஷ் உடலின் மீது போற்றப்பட்ட தேசியக்கொடி அரசு மரியாதையுடன் எடுக்கப்பட்டு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விவரம் அறியா 2 குழந்தைகள் உள்ள நிலையில் ராஜேஷ் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.