குடிநீருக்காக போராடிய மக்கள் ..சட்டவிரோதமாக கூடியதாக வழக்கு.. காவல்துறைக்கு வலுக்கும் கண்டனம்
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தற்போது நாடு முழுவதுமே ஒரே குரலில் பேசும் பொருளாக மாறியுள்ளது தண்ணீர். கடந்த 3 மாதங்களாக வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலுக்கு, தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகள், அணைகள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.
இதனையடுத்து குடிநீர் தேவையை சமாளிக்க ஆங்காங்கே நிலத்தடி நீரை பயன்படுத்த துவங்கினர். கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் மிக அதிக அளவில் உறிஞ்சப்பட்டதால், ஒருகட்டத்தில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது.
மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி தண்ணீருக்காக மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் இந்த பாடத்திட்டம் சூப்பர்.. எங்க மாநிலத்தில் பின்பற்றுவோம்.. உ.பி. துணை முதல்வர்
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வேலம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால் நேற்று அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
இதே போல திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்களும் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
ஆம்பூர் அருகேயுள்ள பேரணாம்பட்டு ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சில மாதங்களாக கடும் குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஊராட்சி செயலாளர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
ஆனால் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் நேற்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட, துத்திப்பட்டு கிராம மக்கள் மீது தான் காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 20 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக ஒன்று கூடி மறியல் செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நடவடிக்கைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது