நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க வாதாடிய நளினி.. ஒரு மாத பரோல் வழங்கி ஹைகோர்ட் உத்தரவு
நளினிக்கு சென்னை ஹைகோர்ட் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது
Recommended Video
வேலூர்: பெண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய பரோல் வேண்டும் என்பதற்காக, தானே கோர்ட்டில் நேரில் ஆஜராகி கண்ணீருடன் வாதாடினார் நளினி. அவருக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் கோரி நளினி தொடர்ந்த வழக்கில், தானே ஆஜராகி வாதிட இருப்பதால், அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சென்னை உயர் நீதிமன்றம் அழைத்து வந்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 வருஷமாக சிறையில் இருக்கிறார் நளினி. தனது மகள் திருமணத்திற்காக 6 மாத பரோல் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். மேலும் காணொலி மூலம் ஆஜராக விருப்பமில்லை என்றும், அந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிடும் வகையில் தன்னை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
உத்தரவு
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. சட்டப்படி ஒரு வழக்கில் தானே ஆஜராகி வாதிட எல்லாருக்குமே உரிமை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நளினியை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்துமாறு சிறைத்துறைக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டனர்.
போலீசார்
அதேபோல, சிறைவிதிகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நளினிக்கு அறிவுறுத்தியும் இருந்தனர். இதனையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியை 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்னை ஐகோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர்.
கண்ணீர்
நளினி வருகையையொட்டி கோர்ட் வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் முன்பு ஆஜரானார் நளினி. முதலில் நேரில் வாதாட அனுமதி அளித்தமைக்காக கண்ணீர் மல்க நன்றி கூறினார். பின்னர் எழுதி வைத்திருந்த வாதத்தை அவர் நீதிபதிகளிடம் வாசித்து தனது தரப்பு கோரிக்கையை முன்வைத்தார்.
ஒரு மாதம்
தான் சிறை விதிகளை முறையாக கடைப்பிடிப்பதை விளக்கிப் பேசிய நளினி தனது மகள் திருமணத்திற்காக தனக்கு 6 மாத கால பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். பேரறிவாளனுக்கு ஒரு மாத கால பரோல் அளிக்கப்பட்டது. அதேபோல நளினிக்கும் அளிக்க அரசு தயாராக இருப்பதாகஅவர் தெரிவித்தார்.
உத்தரவாதம்
பரோலில் விடுதலை செய்ய நளினி தரப்பில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தனது உறவினர்கள், நண்பர்கள், தங்குமிட முகவரி உள்ளிட்டவற்றை சிறைத்துறைக்கு நளினி அளிக்க வேண்டும். இவற்றை 10 நாட்களில் சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து முடித்து பரோல் தேதியை முடிவு செய்ய வேண்டும். பரோல் காலத்தில் அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கக் கூடாது. செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது. பரோல் நிபந்தனைகளை மீறினால் உடனடியாக பரோல் ரத்தாகி விடும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியிருந்தனர்.