சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட காரணம் என்ன?.. வானிலை ஆய்வு மைய இயக்குநர் பரபரப்பு விளக்கம்
Recommended Video
வேலூர்: சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் குடங்களுடன் மக்கள் இரவு பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைகின்றனர். தண்ணீர் பிரச்சினைக்காக மக்கள் எவ்வித தீர்வையும் காணவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் அதிமுக சார்பில் யாகமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்
சென்னை வானிலை மையம்
இந்த மழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் அளவில் இல்லை. ஜோலார்பேட்டை அருகே பாச்சல் குருமன்ஸ் காலனியில் உள்ள வரசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கலந்து கொண்டார்.
பருவமழை
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்திற்கு முக்கியமான காலமாகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 55 சதவீதம் குறைவாக பெய்தது.
வடக்கே செல்வதில் தாமதம்
தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும். இந்த ஆண்டு கேரளத்தில் தொடங்கிய தென்மேற்கு மழை படிப்படியாக நகர்ந்து வடக்கே செல்லும். ஆனால் சமீபத்தில் வாயு புயல் உருவாகி குஜராத்துக்கு நகர்ந்து சென்றுவிட்டதால் தென்மேற்கு பருவமழை வடக்கே செல்வதில் தடை ஏற்பட்டுவிட்டது.
44 சதவீதம் நீர் குறைவு
சென்னையில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாடு தென் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுவாக மழையின் அளவு, மக்கள் தண்ணீரை பயன்படுத்தும் அளவு ஆகியவற்றை பொருத்தே தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அதன்படி சென்னையில் மட்டும் 44 சதவீதம் மழை குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் அதிகபடியான மக்கள் அதிகளவு தண்ணீரை பயன்படுத்துவதால் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மழை நீர் சேகரிப்பு தொட்டி
மழை காலங்களில் தமிழகத்தில் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். ஊர்க் கூடி தேர் இழுப்பது போல் அனைவரும் மழை நீரை சேமித்தால் இனி வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்றார் பாலசந்திரன்.