கழிவறை கேட்டு தந்தை மீது புகார் தந்த 7 வயது சிறுமி.. ஆம்பூர் தூய்மை இந்தியா தூதுவரானார்!
கழிவறை கேட்டு போராடிய சிறுமி ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர்: வீட்டில் கழிவறை கட்டித் தருவதாக ஏமாற்றி வரும் தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த 7 வயது சிறுமியை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக ஆம்பூர் நகராட்சி அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஷானுல்லா. இவரது மகள் ஹனீஃபா ஜாரா (7), அங்குள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார் இஷானுல்லா கூலித் தொழிலாளி என்பதால், அவரது வீட்டில் கழிவறை கட்டும் அளவிற்கு வருமானம் வரவில்லை.
ஆனால், சிறுமி ஹனீஃபா வீட்டில் கழிவறை கட்டித் தரும்படி அப்பாவிடம் நச்சரித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை சமாதானம் படுத்தும் பொருட்டு, அவர் படிப்பில் முதல் மதிப்பெண் எடுத்தால் கழிவறை கட்டித் தருவதாக இஷானுல்லா கூறியுள்ளார்.
அப்பாவின் வார்த்தையை அப்படியே நம்பிய சிறுமி, தொடர்ந்து தீவிரமாக படித்து வந்துள்ளார். ஆனால், எல்.கே.ஜி முதல் தற்போது வரை அவர் முதல் மதிப்பெண் எடுத்தும், சொன்னபடி அவரது தந்தை கழிவறை கட்டித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அச்சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கழிவறை கட்டி தராத தந்தை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கழிவறை கேட்டு தந்தை மீது மகளே புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், உடனடியாக ஹனீஃபா வீட்டிற்கு கழிவறைக் கட்டித் தரச் சொல்லி ஆம்பூர் நகராட்சி கமிஷ்னருக்கு உத்தரவிட்டார்.
சிறுமி ஹனீஃபாவின் முயற்சியால் தற்போது அவரது வீட்டிற்கு கழிவறைக் கிடைத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஹனீஃபாவின் இந்த முயற்சியைப் பாராட்டி, அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் ஆம்பூர் நகராட்சி தூதுவராக, நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி நியமித்துள்ளார்.