உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் நடித்தது ஏன் தெரியுமா? முதல்வர் பழனிச்சாமி கொடுத்த பரபரப்பு விளக்கம்!
உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் சில திரைப்படங்களில் நடிக்க வைத்தது ஏன், என்று முதல்வர் பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
வேலூர்: உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் சில திரைப்படங்களில் நடிக்க வைத்தது ஏன், என்று முதல்வர் பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .
சட்டம்
இன்று பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. திமுகவில் கடுமையாக கோஷ்டி மோதல் இருக்கிறது. திமுக முன்னாள் மேயரை திமுக நிர்வாகியின் மகனே கொன்றுள்ளார். அவர்களை தமிழக போலீஸ் உடனடியாக கைது செய்தது. சிந்தாமல் சிதறாமல் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
திமுக எப்படி
திமுக வேட்பாளருக்கு நெருக்கமானவரிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆனால் வேலூர் தேர்தலை வேறு காரணத்திற்காக நிறுத்தியதாக திமுக மக்களை திசை திருப்பி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பொய் சொல்வதையே வழக்கமாக வைத்து இருக்கிறார்.
காரணம்
வேலூர் தேர்தலில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான சீருடை வழங்கப்படுகிறது. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கேபிள் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
ஏன் தெரியுமா?
உதயநிதி அரசியலுக்கு வருவது முன்பே திட்டமிடப்பட்டது. உதயநிதியை தலைவராக்குவதற்காகவே சில திரைப்படங்களில் நடிக்க வைத்தனர். தலைவர் மகனே தலைவராவது தான் வாரிசு அரசியல். திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமேதான் இருக்கிறது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.