சிதம்பரம் தொகுதியில் போட்டி... திருமாவளவன் உறுதி
வேலூர்: வருகிற லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விசிக, தொகுதி பங்கீடு குறித்து நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை இணக்கமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைந்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.
இந்தநிலையில், வேலூர் ஊரிசு கல்லூரியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: மு.க. ஸ்டாலின் - விஜயகாந்த் சந்திப்பு அ.தி.மு.க.வினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட உள்ளேன் என்றார்.
கூட்டணியை உருவாக்கி பல மாதங்களாக தி.மு.க.வுடன் செயல்பட்டு வருவதால் தி.மு.க. கூட்டணியில் தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.
2 நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்றும், தி.மு.க கூட்டணியில் நாங்கள் போட்டியிட விரும்பும் பட்டியலை வழங்கி உள்ளோம். இறுதி பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.