தரமில்லாமல் போன எடப்பாடியார்.. ஜெயலலிதாவுக்கு புகழாரம்.. ஸ்டாலிலின் புது டிரெண்ட்!
திருத்தணி : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை நிச்சயமாக கண்டுபிடிப்போம் என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் , திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
ஜெயலலிதாவிற்கு புகழாரம் :
அப்போது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. சாதாரணமாக ஒருவர் இறந்து விட்டால் கூட, அந்த மரணத்திற்கு என்ன காரணம் என்று விசாரிக்கிறோம். ஆனால் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது இன்றும் மர்மமாகவே இருக்கிறது.
ஊரை ஏமாற்றுகிறார்கள் :
விசாரணைக் கமிஷன் வேண்டும் என்று திமுக கேட்கவில்லை. அவ்வாறு கேட்டது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான். அந்த விசாரணைக் கமிஷன் 8 முறை அழைத்தும் இதுவரை ஒரு முறை கூட அவர் செல்லவில்லை. ஆனால் இன்றைக்கும் அ.தி.மு.க.வில் இருக்கும் பழனிசாமியிலிருந்து, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வரை அனைவரும் பாக்கெட்டில் அந்த அம்மா படத்தை வைத்திருக்கிறார்கள். அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் கண்டுபிடிப்பேன் :
அந்த அம்மையார் மரணத்தை கூட இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் வந்தவுடன், முதல் வேலையாக, முன்னாள் முதலமைச்சருடைய மரணத்தில் உள்ள மர்மத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, நாட்டு மக்கள்முன் நிறுத்தப்போகிறேன். அந்த பணியை இந்த ஸ்டாலின் செய்யப்போகிறேன். இதனை அதிமுக.,வினரும் வரவேற்பார்கள். ஏனென்றால் அவர்கள் தெய்வமாக, அம்மாவாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு தலைவர் அவர், ஒரு முதலமைச்சர் அவர்.
தரங்கெட்ட முதல்வர் :
தேர்தல் பிரச்சாரம் செல்லும் பழனிசாமி, மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசும் ஒரு முதலமைச்சராக இருந்து வருகிறார். அவர் தரம் இல்லாமல் இருக்கலாம். தரங்கெட்டுப்போனவராக இருக்கலாம். அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பதவி ஒரு தரம் மிக்க பதவி. ஒருமையில் பேசுவது, கொச்சைப்படுத்திப் பேசுவது, விமர்சனம் செய்வது என்பது அவருடைய பதவிக்கு அழகல்ல.
அரசு பணத்தில் விளம்பரம் :
அவரைப்போன்று நாங்கள் பேச மாட்டோம். கலைஞர் எங்களுக்கு அவ்வாறு கற்பித்துத் தரவில்லை. ஜனநாயக முறைப்படிதான் பேச வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறார். கேடுகெட்டத்தனமாக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஆத்திரத்தின் உச்சியில், 4 மாதங்களில் பதவி போகப்போகிறது என்ற விரக்தியில் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.
விலைவாசி உயர்வு பற்றி பழனிசாமியும், மத்தியில் இருக்கும் மோடியும் கவலைப்படவில்லை. அரசு பணத்தில் இவர்கள் கட்சிக்கு விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.