ஒப்புக்குச் சப்பாணி போல நிதி கேட்டால் எப்படி கொடுப்பார்கள்.. தமிழக அரசு மீது துரைமுருகன் பாய்ச்சல்
புயல் சேத மதிப்பீடு குறித்து தமிழக அரசை துரைமுருகன் விமர்சித்தார்.
Recommended Video
வேலூர்: "ஹெலிகாப்டரில் போனாலும் கீழே இறங்கி நடக்கணும்" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு வந்தார். இதுகுறித்த விமர்சனங்களை தொடர்ந்து, ஸ்டாலின், கமல் உள்டபட எதிர்க்கட்சிகள் எல்லோருமே முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காட்பாடியில் திமுக மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அத்தொகுதி எம்எல்ஏவும், எதிர்கட்சி துணை தலைவரும், திமுக பொருளாளருமான துரைமுருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது:
நிதி தேவைப்படும்
தஞ்சை, நாகை என 7 மாவட்டங்களில் புயல் சேதம் ஏற்பட்டு, வீடுகள், நிலங்கள், எல்லாமே பாதிப்படைந்து மக்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகி உள்ளது. இதையெல்லாம் திரும்பவும் சரி செய்ய நிறைய நிதி தேவைப்படும்.
அறிவிப்பு ஏதும் இல்லை
பாதிக்கப்பட்ட இடங்கள் என்னென்ன, எவ்வளவு சேதம் ஆகியிருக்கிறது, இதையெல்லம் மீண்டும் சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும் என கணக்கிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இது சம்பந்தமாக அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று சொல்கிறார்களே தவிர, இதுவரை ஒட்டுமொத்த கணக்கீடு பற்றி தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஒப்புக்கு சப்பாணி
எல்லாவற்றையும் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பாணியாக மத்திய அரசிடம் மாநில அரசு நிதி கேட்டுள்ளது. முழு கணக்கீடு இல்லாமல் மத்திய அரசு எப்படி நிதி அளிக்கும்? இன்னும் தானே புயலுக்கு வரவேண்டிய நிவாரணமே நமக்கு வந்து சேரவில்லை. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ வந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு தமிழ்நாடு என்று ஒன்று இருப்பது கூட தெரியவில்லை.
அரசியலாக்கவில்லை
முதலமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்துவிட்டு வந்துவிட்டார். நானும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும்போது ஹெலிகாப்டரில் போவேன். ஆனால் முத்துப்பேட்டையிலிருந்து நடந்தே போவோம். ஆனால் முதல்வர் கீழே இறங்கவேயில்லையே? அவர் இறங்கி நடந்து சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்திருக்க வேண்டும். பாதிப்பு இடங்களை ஸ்டாலின்தான் முதலில் சென்று பார்வையிட்டார். அதேநேரத்தில் கஜா புயலை திமுக அரசியலாக்கவில்லை"
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.