திமுக பொருளாளர் துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்.. அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்
வேலூர்: அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Recommended Video
வேலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் முழுதும் 37 குடிநீர் ஆலைகள் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி உள்ளதாகவும் அந்த ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
இந்த நிலையில் வேலூர் காட்பாடி அருகே உள்ளிபுதூர் கிராமத்தில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான அருவி என்ற பெயரில் உள்ள குடிநீர் ஆலையும் உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு நீர்வள ஆதார அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றம் ஆணைக்கு இணங்க அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி விற்பனை செய்து வந்த குடிநீர் ஆலைகளுக்கு தொடர்ந்து சீல் வைக்கப்படுகிறது. இந்தநிலையில் காட்பாடியில் உள்ள ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
துரைமுருகன் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். தற்போதும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இதுபோன்று மக்கள் பிரதிநிதியாக உள்ள ஒருவரே அரசிடம் உரிய அனுமதி பெறாமல் ஆலைகளை நடத்தி வந்த சம்பவம் வேலூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக துரைமுருகன் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.