சேலத்தை தொடர்ந்து வேலூரில்... திமுக புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு எதிர்ப்பு
வேலூர்: வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தேவராஜுவுக்கு எதிராக திமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகன் ஆதரவாளரான தேவராஜுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது.
கடந்த 10 நாட்களாக திமுகவில் மாவட்டம் வாரியாக பெரியளவில் மாற்றங்களை செய்து வருகிறார் ஸ்டாலின். இதுவரை திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, என பல மாவட்டங்களில் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இதில் திருச்சி, நாமக்கல்லில் எந்த சலசலப்பும் எழாத நிலையில் சேலம் கிழக்கு மாவத்திலும், வேலூர் மேற்கு மாவட்டத்திலும் புதிய பொறுப்பாளர் நியமனத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் உ.பி.க்கள். இதனால் அதனை பஞ்சாயத்து செய்து தீர்த்து வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு.
திமுக பொருளாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான தேவராஜ், கடந்த 6-ம் தேதி வேலூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன் அந்த பதவியில் இருந்த முத்தமிழ் செல்விக்கு வேறு பொறுப்பு ஏதும் கட்சியில் கொடுக்கப்படவில்லை. இதனிடையே தேவராஜ் நியமனத்தில் துரைமுருகன் பங்கு முக்கியமானது என கருதிய வேலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், அவரை சந்தித்து தேவராஜ் மீதான புகார்களை அடுக்கினர். ஆனால், அது குறித்து துரைமுருகன் அலட்டிக்கொண்டது போல் தெரியவில்லை.
இதனால் தங்கள் எதிர்ப்பை தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என நினைத்த நிர்வாகிகள் பட்டினி கிடந்து வளர்த்த கட்சியை, பணம் பறிக்கும் கும்பலிடம் தருவதா என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் உண்மை தொண்டர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர வேறு யார் பெயரும் இடம்பெறவில்லை. இதனிடையே திமுக தலைமைக்கழகத்துக்கு பெயர் இல்லாத வகையில் நூற்றுக்கணக்கில் கடிதங்களும் அனுப்பப்படுகின்றன. இது குறித்தெல்லாம் படித்து பார்த்து விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் கே.என்.நேரு.
திமுக பாணியை பின்பற்றும் அதிமுக... நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்த ஓ.பி.எஸ்.
ஏற்கனவே சேலம் கிழக்கு மாவட்டத்தில் இதேபோல் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது நேரு தான் தலையிட்டு வீரபாண்டி ராஜாவிடம் பேசி நிலைமையை சுமூகமாக்கினார்.